சென்னை: 2026 ஐபிஎல் தொடரில், அதாவது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட போவதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சுரேஷ் ரெய்னா வர்ணனையின் போது சூசகமாக இதை சுட்டிக்காட்டி இருந்தார். இது உண்மைதானா என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராமிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் நாசுக்காக அதற்கு பதில் அளிக்காமல் தப்பினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக விளையாடி இருக்கிறது. இந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைத்தான் பிடித்தது. இந்த நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்களின் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணி ஆடியது. அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக பேசினர்.

சுரேஷ் ரெய்னா சொன்ன இந்த தகவலை கேட்ட ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளரின் முதல் எழுத்து 'எஸ்' இல் ஆரம்பிக்குமா என்று கேட்டார். அதற்கு சுரேஷ் ரெய்னா பதில் அளிக்கையில், "அவர்தான் அதிவேக அரை சதத்தை அடித்தவர்" என்று கூறினார்.
அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரை சதம் அடித்தது சுரேஷ் ரெய்னா தான். 2014 ஆம் ஆண்டு அவர் 16 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அதுவே சிஎஸ்கே அணிக்காக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிவேக அரை சதமாகும். அதைத்தான் சுரேஷ் ரெய்னா இப்படி சுட்டிக்காட்டி இருந்தார்.
இதை அடுத்து ஆகாஷ் சோப்ரா, "நீங்கள் இந்த தகவலை இங்கேதான் முதன்முறையாக கேட்கிறீர்கள்" என்று பார்வையாளர்களுக்கு சொன்னார். இதன் மூலம் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக பரபரப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் இது குறித்த பலரும் தகவல்களை பரிமாறி வந்தனர்.
அதன் பிறகு சிஎஸ்கே அணியின் துணை பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை சந்தித்த சில பத்திரிக்கையாளர்கள், சுரேஷ் ரெய்னா சொன்னது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. ரெய்னா இப்படி சொன்னாரா என்பதை நான் அவரிடம் கேட்க வேண்டும்" என்று கூறி நழுவினார்.
இதை வைத்து பார்க்கும் போது சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மற்றொரு வகையில், தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்தான். அதற்காகவே சிஎஸ்கே அணியை சரியாக வழிநடத்த முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவை அந்த அணி நிர்வாகம் நாடி இருக்கிறது என்ற ஒரு பார்வையும் உள்ளது.