பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் நியமிக்கப்படுவாரா? என சில நாட்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள் சிலரும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விராட் கோலி கேப்டனாக இருந்து வழிநடத்த வேண்டும் என பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி தங்கள் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக செயல்பட்டு வந்த ஃபாப் டூ பிளசிஸ்-ஐ அணியில் இருந்து விடுவித்து இருக்கிறது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இயக்குனர் மோ போபாத் இது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், "அனைவரையும் ஏமாற்றம் அடைய செய்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். விராட் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்தோ, எங்கள் அணியின் கேப்டன்சி குறித்தோ நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை." என்றார்.
மேலும், "நாங்கள் அனைத்து விதமான வாய்ப்புகளையும் பரிசீலிக்க இருக்கிறோம். பாப் டூ பிளசிஸ்-ஐ தக்க வைக்க வேண்டாம் என்பது மட்டுமே இப்போதைக்கு நாங்கள் எடுத்த முக்கியமான முடிவு. அவர் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டார். எங்களை பொறுத்த வரை ஏலத்தில் நாங்கள் திறந்த மனதுடன் செல்ல விரும்புகிறோம்." என்றார்.
இதன் மூலம் அவர் விராட் கோலியும் கேப்டனாக வர வாய்ப்பு உள்ளது என சூசகமாக உணர்த்தி இருக்கிறார். ஒருவேளை ஏலத்தில் கேப்டன்சிக்கு ஏற்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக விராட் கோலி மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கே எல் ராகுலை ஏலத்தில் வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வந்தால் அவரே அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக அவரை தங்கள் அணிக்கு வந்து விடுமாறு நேரிலும், சமூக வலைதளங்களிலும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.