மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டபோது முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் ஒரு கணிப்பை வெளியிட்டார். அதில் ஏப்ரல் 17ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் 300 ரன்கள் குவித்து சாதனை படைக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான இசான் கிஷன் இடம் ஸ்டெயினின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இசான் கிஷன், ஒருவேளை நாங்கள் சேசிங் செய்தால் எந்த இலக்கை நோக்கி விளையாடுகிறோம் என்பது நம் மனதில் எப்போதுமே இருக்கும். அதுவே நீங்கள் முதலில் பேட்டிங் செய்கிறீர்கள் என்றால் பந்தை பார்த்து அடிக்க வேண்டியது தான் நமது வேலை. முதல் ஆறு ஓவரில் எவ்வளவு ரன்களை அடித்து இருக்கிறோம்.
ஆடுகளம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு அதன்பின் எந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். எனவே இந்த இலக்கை தான் தொட வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு வேளை நாங்கள் நல்ல தொடக்கத்தை எட்டி விட்டால் ஏன் எங்களால் முடியாது என்று இசான் கிஷன் பதில் அளித்துள்ளார்.
இதேபோன்று பேட்டிங் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் வருவது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் சூழல் ஒரே மாதிரியாக தான் இருக்கும். எனினும் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும் .ஒருவேளை விக்கெட்டுகள் விழுந்தால் நமது பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
இதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வழங்கினால் அனைத்தும் சுலபமாகிவிடும். உங்களது பணி என்ன என்று உங்களுக்கு தெரிந்தால், அதை சரியாக செய்யலாம். ஒருவேளை நல்ல பவர் பிளே அமைந்தால் இன்னிங்ஸின் நடு ஓவர்களில் அதிரடி காட்டலாம். ஆனால் ஏழாவது ஓவரில் வந்து களமிறங்கும் போது பார்ட்னர்ஷிப் அமைப்பதிலே கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம் வித்தியாசமான பணி தான். ஆனால் அதற்கு நான் என்னை தயார் படுத்திக் கொள்கின்றேன் என்று இசான் கிஷன் கூறியுள்ளார்.