மும்பை: லக்னோ அணியின் உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தவர் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தான் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா தெரிவித்துள்ளார். முதல் சீசனில் நடந்த மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான அனைத்து பணிகளையும் கவுதம் கம்பீர் தனியாளாக மேற்கொண்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான விதிகள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதனால் மெகா ஏலத்தில் என்ன மாதிரியான விதிகள் கொண்டு வரப்படும், வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் விலகினால் தடை செய்யப்படுவதற்கான விதிகள் கொண்டு வரப்படுமா என்பது தொடர்புடைய விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆர்டிஎம் மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதிகளில் என்ன மாதிரியான மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சைலண்ட்டாக லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கானை ஒப்பந்தம் செய்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் சஞ்சீவ் கொயங்கா. ஏனென்றால் மும்பை அணி அவ்வளவு எளிதாக தனது நிர்வாகிகளை வெளியில் விடாது.
அதிலும் ஊதியம் குறித்து பேச்சே அங்கு இருக்காது என்று பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஜாகீர் கானை லக்னோ அணி ஒப்பந்தம் செய்தது எப்படி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு ஜாகீர் கான் வைத்த சில கோரிக்கைகளை லக்னோ அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் போட்டிகள் இல்லாத நேரங்களிலும் வீரர்களுடன் பணியாற்றவும், தயார் செய்யவும் ஜாகீர் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த லக்னோ அணி அவருக்கான ஊதியத்தை கொடுத்து உடனடியாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலமாக கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற பணிகளை ஜாகீர் கான் நிச்சயம் தொடர்வார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கவுதம் கம்பீர் குறித்து லக்னோ அணி உரிமையாளர் ஜாகீர் கான் பேசுகையில், லக்னோ அணி பலமாக உருவாக்கப்பட்டதற்கு கவுதம் கம்பீர் தான் முக்கியமான காரணம். மெகா ஏலத்தில் முதல்முறையாக எப்படி செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு போதுமான அனுபவம் கிடையாது. ஆனாலும் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முதன்மை காரணம் கவுதம் கம்பீர் தான்.
அதுமட்டுமல்லாமல் மெகா ஏலத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பாக தான் லக்னோ அணி எங்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது எங்களிடம் அனலிஸ்ட், ஆய்வு குழு என்று யாருமே இல்லை. அதனால் லக்னோ அணியை முழுக்க முழுக்க உருவாக்கியது கவுதம் கம்பீர் தான். அவரால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, சரியான பேலன்ஸ் கொண்ட அணியை உருவாக்கி காட்டினார்.
லக்னோ அணியில் இருந்த ஒவ்வொரு வீரருக்கும், நிர்வாகிக்கும் ஒரு ரோல் உள்ளது. கவுதம் கம்பீர் அவரின் பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தார் என்று பாராட்டியுள்ளார். லக்னோ அணியுடன் 2 ஆண்டுகள் பயணித்த கவுதம் கம்பீர், பின்னர் கேகேஆர் அணிக்கு ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற அவர், இந்திய அணியின் பயிற்சியாளராக பணியை தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.