சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேனுக்கு பவுலிங் செய்ய சிரமத்தை சந்தித்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார். பும்ராவின் பதில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் ஜஸ்பிரிட் பும்ரா. 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், தொடர் நாயகன் விருதையும் வென்று சாதனை படைத்தார். இதன் மூலமாக ஐசிசி தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் பவுலர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்தது.

இதன்பின் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய ஜாம்பவான் விராட் கோலி பேசுகையில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை இந்தியாவின் பொக்கிஷமாக அறிவிக்க யாராவது முன் மொழிந்தால், அந்த கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திடும் முதல் நபராக நான் தான் இருப்பேன் என்று கூறி பாராட்டினார்.
டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிட்ச் கணிப்பது, எந்த வேகத்தில் பவுலிங் செய்வது என்பதை முடிவு செய்வது, எந்த பேட்ஸ்மேனுக்கு என்ன திட்டம், சூழலுக்கு ஏற்ப பிரஷரை அதிகரிப்பது என்று பும்ரா ஒரு பவுலிங் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பந்து ரிவர்ஸ் ஸ்விங்கான போது, ரோஹித் சர்மாவிடம் நேரடியாக சென்று பந்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று பிடுங்கி கொண்டு பவுலிங் செய்து அசத்தினார். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் நடந்த இளம் மாணவர்களுக்கான விழாவில் பும்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக மரண மாஸ் மரியாதை அளிக்கப்பட்டது. இந்த விழாவில் தொகுப்பாளர் பும்ராவிடம் நீங்கள் எந்த பேட்ஸ்மேனுக்கு பவுலிங் செய்ய சிரமப்பட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பும்ரா, இந்த கேள்விக்கு நிச்சயம் சிறந்த பதிலை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் எந்த பேட்ஸ்மேனும் எனது மூளையில் சிறந்தவர் என்ற சிந்தனை ஏறிவிடக் கூடாது. அனைத்து பேட்ஸ்மேன்கள் மீது எனக்கு அதிகபடியான மரியாதை உள்ளது. ஆனால் எனது பணியை நான் சிறப்பாக செய்தால், இந்த உலகில் யாராலும் என்னை தடுக்க முடியாது என்று நம்புவேன். களத்தில் இருக்கும் போது எதிரணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கவே மாட்டேன்.
எனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்றே நினைப்பேன். எனது செயல்பாடுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. அதனால் களத்தில் சிறந்த செயல்பாடை வெளிப்படுத்தினால், மற்றவை தானாக நடக்கும். அதனால் எந்த பேட்ஸ்மேனின் பெயரையும் கூறி என்னைவிட சிறந்தவர் என்று எண்ணத்தை யாருக்கும் உருவாக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பும்ராவின் பேச்சு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. தலைவனுக்குரிய பண்புகளுடன் பும்ரா பேசுவதாகவும், டெஸ்ட் கேப்டன்சியை ரோஹித் சர்மாவுக்கு பின் பும்ராவுக்கு அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் பும்ராவின் பேச்சு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.