மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தான் மிகவும் பிடித்த பவுலர் என்று சிஎஸ்ஜே நட்சத்திர வீரர் தோனி தெரிவித்துள்ளார். அதேபோல் பேட்ஸ்மேன்களில் பலரும் இந்திய அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்து வருவதால், ஒருவரை தேர்வு செய்வது கடினமாக இருப்பதாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியவர் பும்ரா. 8 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா, 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சம காலத்தில் பும்ரா அளவிற்கு எந்த அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரும் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தவில்லை. இதன் காரணமாக பும்ராவை முக்கிய தொடர்களில் மட்டும் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பும்ரா அளித்த பேட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கீழ் விளையாடும் போது பாதுகாப்பாக உணர்ந்தேன். திடீரென விமானத்தில் ஏறி ஆஸ்திரேலியா அழைத்து செல்லப்பட்டேன். எம்எஸ் தோனியிடம் எப்படி பேசுவது என்றே தெரியாது. அவரை பொறுத்தவரை திட்டமிடலை கடந்து, உள்ளுணர்வை அதிகமாக நம்புவார் என்று தெரிவித்தார்.
இது தோனி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே வீரர் தோனி பங்கேற்றார். அப்போது தோனியிடம் சம காலத்தில் சிறந்த பவுலர், சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, தற்போது பிடித்த பவுலர் என்றால் எல்லாரும் எளிதாக சொல்லிவிடுவார்கள். பும்ரா இருக்கும் போது தேர்வு செய்வது எளிய விஷயம்.
ஆனால் பிடித்த பேட்ஸ்மேனை எளிதாக தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால் இந்திய அணிக்காக ஏராளமான பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்காக மற்ற பவுலர்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதில்லை. பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வது எளிதாக இல்லை. ஏனென்றால் ஒரு வீரர் சிறப்பாக விளையாடுகிறார் என்று பார்த்தால், இன்னொரு வீரர் மிகச்சிறப்பாக விளையாடுகிறார்.
இந்திய அணி சிறப்பாக செயல்படும் போது, பிடித்த பேட்ஸ்மேனை சொல்ல விரும்பவில்லை. அனைவரும் அதிகமான ரன்களை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய அணியின் கேப்டனாக தோனி இருக்கும் போது தான் பும்ரா அறிமுகம் செய்யப்பட்டார். யார்க்கர்கள் வீசும் திறமையை பார்த்து பாராட்டிய தோனி, தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.