மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் இன்னும் 9 நாட்களில் நடக்கவுள்ள நிலையில், 17 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் போராடி வரும் ஆர்சிபி அணி நிர்வாகம் தரப்பில் எந்தெந்த வீரர்களை வாங்க வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு பின் அதிக தொகையுடன் களமிறங்கும் அணியாக ஆர்சிபி உள்ளது. விராட் கோலியை ரூ.21 கோடிக்கும், ரஜத் பட்டிதரை ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாளை ரூ.5 கோடிக்கும் ஆர்சிபி அணி ரீடெய்ன் செய்துள்ளது. இதன் காரணமாக ரூ.37 கோடி பர்ஸ் தொகையில் இருந்து கழிக்கப்பட்ட நிலையில், ரூ.83 கோடியுடன் ஆர்சிபி அணி மெகா ஏலத்தை சந்திக்க உள்ளது.

இம்முறை ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர் இருக்கிறார். பெங்களூர் மைதானத்தில் பவுலிங் செய்யக் கூடிய பவுலர்களை வாங்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய விக்கெட் கீப்பருக்கு செல்லாமல், வெளிநாட்டு தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்று இரு ரோல்களை செய்யக் கூடியவர்களை வாங்கவ்ம் திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆர்சிபி அணியின் பட்டியலில் ஜோஸ் பட்லரின் பெயர் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த அவர், இம்முறை அந்த அணியால் ரீடெய்ன் செய்யப்படவில்லை. 6 சீசன்களில் விளையாடிய அவர் 3 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசி இருக்கிறார். கன்சிஸ்டன்சியுடன் விளையாடுவதால், விராட் கோலியுடன் அவர் தொடக்கம் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் சாஹல் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக 113 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவரை, 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி கைவிட்டது. அதன்பின் ராஜஸ்தான் அணிக்காக 3 சீசன்களில் விளையாடி 66 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெங்களூர் மைதானத்தை நன்றாக புரிந்து கொண்டு செயல்படக் கூடிய ஸ்பின்னர்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளரான ககிசோ ரபாடாவை வாங்க ஆர்சிபி அணி முயற்சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சிறந்த வேகப்பந்துவீச்சாளரால் பெங்களூர் மைதானத்தில் சிறப்பாக செயல்பட முடியும். ஐபிஎல் தொடரில் ரபாடா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒருவேளை ரபாடா இல்லையென்றால், ஸ்டார்க் மற்றும் ஆர்ச்சரை வாங்க வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் இந்திய அணிக்காக அசத்தி வரும் வாஷிங்டன் சுந்தரை வாங்க பெரிய தொகை கொடுக்கவும் ஆர்சிபி அணி தயாராகி வருகிறது. ஏனென்றால் ஆஃப் ஸ்பின்னர் என்பதோடு, டவுன் தி பேட்டிங் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன். கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக ஷாபாஸ் அஹ்மத் செய்த பணியை வாஷிங்டன் சுந்தரால் மிகச்சிறப்பாக செய்ய முடியும்.
இறுதியாக ஆர்சிபி அணி ஒரு கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் கேஎல் ராகுலை மீண்டும் வாங்குவதற்கு தீவிரமாக முயற்சிக்கும். ஏற்கனவே லக்னோ அணியில் இருந்த போது பயிற்சியாளர் ஆண்டி பிளவர், கேப்டன் கேஎல் ராகுலுடன் நெருங்கி பணியாற்றியுள்ளார். அதேபோல் ஆர்சிபி அணிக்கு கேஎல் ராகுலை கொண்டு வருவதன் மூலமாக உள்ளூர் ரசிகர்களின் ஆதரவையும் பெற முடியும்.