மும்பை: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, நட்சத்திர வீரர் தோனி பதில் அளித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.4 கோடிக்கு தோனியை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பட்டியல் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ளது. இம்முறை ரிடென்ஷன் செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தாலும், ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி தோனி மீண்டும் சிஎஸ்கே அணிக்காக களமிறங்குவாரா என்பது தான். அவருக்காக ஐபிஎல் விதிகளிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் விளையாடி 5 ஆண்டுகளை கடந்த இந்திய வீரர்கள், ஐபிஎல் மெகா ஏலத்தில் அன்-கேப்ட் வீரர்களாக கருத முடியும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.4 கோடிக்கு அன்-கேப்ட் வீரராக தோனியை தக்க வைக்க முடியும் என்ற நிலை உருவாகியது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனி விளையாடுவாரா என்பதை உறுதி செய்யாமல் உள்ளது.
அதேபோல் தோனி இதுவரை சிஎஸ்கே அணி நிர்வாகத்தையும் தொடர்பு கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி, அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். அதில் தோனி பேசுகையில், என்னால் இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று தெரியவில்லை.
ஆனால் கடைசி கால கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட்டை கொண்டாட்டமாக விளையாடி அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிறுவயதில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிரிக்கெட் விளையாட செல்வோம். அந்த சம்பவமே மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் கிரிக்கெட்டை தொழில்முறையாக விளையாடும் போது, கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
அதனை மகிழ்ச்சியாக விளையாட முடியவில்லை. கிரிக்கெட்டை போலவே, மகிழ்ச்சியாக விளையாடுவது கடினமாக மாறியது. ஏனென்றால் தொழில்முறையாக விளையாடும் போது எமோஷன், பொறுப்புகள் என்று ஏராளமான விஷயங்கள் வந்துவிடுகின்றன. அதனால் கடைசி காலத்தில் விளையாடும் கிரிக்கெட் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பயிற்சி மற்றும் டயட் பற்றி பேசுகையில், இரண்டையும் எளிதாக வைத்துள்ளேன். சில நேரங்களில் பயிற்சி 15 நாட்கள், 20 நாட்கள், 25 நாட்கள் வரை செல்லும். அதேபோல் மொத்தமாக 15 முதல் 20 நாட்கள் வரை விடுமுறையும் கிடைக்கும். அந்த நேரத்தில் என்ன உணவெல்லாம் பிடிக்குமோ, அதனை சாப்பிடுவேன். ஆனால் பயிற்சியை தொடங்கிய பின், டயட்டை முழுமையாக பின்பற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.