பெங்களூர்: ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் கணக்கை துவங்கி இருந்தது. அதற்கு கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசும் தலையிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்தை எச்சரித்து இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத போதும் கர்நாடகாவில் மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி இருப்பதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தங்கள் ரசிகர் பரப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இந்தியில் சமூக வலைதளக் கணக்குகளை துவக்கியது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகாவில் இந்தி திணிப்பை எதிர்த்து சில ஆண்டுகளாகவே அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தங்கள் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தி ரசிகர்களுக்கு என தனி கணக்கை தொடங்கியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பை பதிவு செய்தன. சமூக வலைதளங்களிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு சார்பில், கன்னட மொழி மற்றும் கலாச்சார அமைச்சகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், உடனடியாக அவர்கள் செய்த தவறை சரி செய்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்ததில் தவறில்லை என்ற போதும், தங்கள் அணியின் ஆணிவேராக இருக்கும் ரசிகர்களின் உணர்வு சார்ந்த விஷயத்தை சீண்டும் வேலையை செய்து உள்ளது.