மும்பை: ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்கவுள்ள மெகா ஏலம் தொடர்பாக 10 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தை பிசிசிஐ கூட்டியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் சிஇஓ ஜேக், டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அணிகளும் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை, ஆர்டிஎம் வாய்ப்பு, இளம் வீரர்களை தக்க வைக்க புதிய வாய்ப்புகள், பர்ஸ் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படவுள்ளன. மும்பை, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் தரப்பில் 6 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இளம் வீரர்களை கண்டறிந்து முதலீடு செய்திருப்பதால், அவர்களை தக்க வைக்க பிரத்யேக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன. ஆனால் பிசிசிஐ தரப்பில் பழைய மெகா ஏலம் முறையை பின்பற்றும் முடிவை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு சிஎஸ்கே, மும்பை, கேகேஆர் உள்ளிட்ட பல்வேறு அணிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம், 10 மணிக்கு மேலாகவும் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் உரிமையாளர்கள் அனைவரும் இரவு உணவுக்கு பின் மீண்டும் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் ஒவ்வொரு அணி நிர்வாகிகளுடன் தனித் தனியாக ஆலோசனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஐபிஎல் உரிமையாளர்கள் பலரும் கேட்டு கொண்டதற்கு ஏற்ப 5 வீரர்களை தக்க வைக்கும் முடிவுக்கு பிசிசிஐ செவி சாய்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பர்ஸ் தொகை அதிகரிப்புக்கும் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முதல் வீரராக ரீடெய்ன் செய்பவர்களுக்கு ரூ.20 கோடி வரை ஊதியம் கொடுக்கும் திட்டத்தில் பல்வேறு அணிகளும் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தும் இடம், தேதி ஆகியவை குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சில நாட்களுக்கு பின்னரே வெளியாகும் என்றும் பார்க்கப்படுகிறது. மேலும், 5 இந்திய வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே, சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.