சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் ரசிகர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காவ்யா மாறன் ஐபிஎல் தொடரின் போது சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளின் போது அவர் பக்கம் தான் கேமரா இருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடும் போட்டிகளின் போது விக்கெட் வீழ்த்தப்பட்டவுடன் காவ்யா மாறன் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைத் தான் கேமராமேன் பலமுறை பதிவு செய்து காட்டுவார். இது பற்றி காவ்யா மாறன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் போட்டியில் காட்டும் முகபாவனைகளை வைத்து மீம்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. அது குறித்தும் காவ்யா மாறன் மனம் திறந்து பேசியுள்ளார்.

"நான் அந்த வீடியோக்களில் காட்டும் உணர்வுகள் மிகவும் வெளிப்படையானவை. எனது வேலையின் ஒரு பங்காக அது இருக்கிறது. நான் அந்தப் போட்டியில் ஆழ்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஹைதராபாத்தில் என்னால் வேறு இடத்தில் சென்று அமர முடியாது; நான் அங்கே தான் அமர வேண்டும்.
ஆனால் அகமதாபாத் அல்லது சென்னையில் நான் கேமராமேனிடமிருந்து பல அடி தூரம் நகர்ந்து அமர்ந்திருப்பேன், பாக்ஸில் அமர்ந்திருப்பேன். ஆனாலும் கேமராமேன் எப்படியோ என்னைக் கண்டுபிடித்து வீடியோ எடுத்து வெளியிடுகிறார். அதனால் தான் அவை மீம்களாக வெளியாகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது." என்று காவ்யா மாறன் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, "நான் அதற்காக எனது இதயத்திலிருந்து செயல்படுகிறேன். நமது இதயத்தையும் ஆன்மாவையும் ஒரு விஷயத்தில் செலுத்தினால், அதன் வெற்றி தோல்விகளில் நாம் ஆழ்ந்து தொடர்பில் இருப்போம்," என்று காவ்யா மாறன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில், இந்த ஆண்டுக்கு முந்தைய ஏலத்தில் காவ்யா மாறன் அதிரடி பேட்ஸ்மேன்கள் கொண்ட அணியை கட்டமைத்து இருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமாக சொதப்பியது. அந்த அணியால் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தையே பெற முடிந்தது.