மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் அட்வைஸ் செய்துள்ளார்.
சச்சின், சேவாக் மற்றும் லாரா ஆகிய மூவரையும் சேர்த்து செய்த கலவை தான் பிரித்வி ஷா என்று முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டி இருந்தார். இந்திய யு19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா தான், மும்பையின் அடுத்த ஜாம்பவான் வீரர் என்று பார்க்கப்பட்டு வந்தார். அதற்கேற்ப சிறு வயதிலேயே இந்திய அணியிலும் அறிமுகமாகி அசத்தினார்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சிப் போட்டியின் போது பிரித்வி ஷாவின் கால்களில் ஏற்பட்ட காயம் அவரின் வாழ்க்கையை புரட்டிபோட்டது. அதன்பின் ஊக்க மருந்து சர்ச்சையில் தொடங்கி பயிற்சிக்கு ஒழுங்காக வராதது வரை பிரித்வி ஷா சிக்கிய சர்ச்சைகளின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 4 ஆண்டுகளில் அதிகளவில் சர்ச்சையில் சிக்கிய வீரர் பிரித்வி ஷா தான்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஷாவை வாங்க எந்த அணிகளும் முன்வரவில்லை. அவரின் அடிப்படை விலையாக ரூ.75 லட்சம் மட்டுமே இருந்த போதும், 10 அணிகளும் அமைதி காத்தன. உலகின் திறமையான வீரர்களில் ஒருவர் என்று பாராட்டப்பட்ட பிரித்வி ஷாவை வாங்க எந்த அணியும் முன்வராதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து விவாதமாகி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் பிரித்வி ஷா மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கிரேக் சேப்பல் தொடங்கி ரிக்கி பாண்டிங், முகமது கைஃப் வரை பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தப் பட்டியலில் இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சனும் இணைந்துள்ளார். இதுகுறித்து பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில், விளையாட்டை பொறுத்தவரை மிகச்சில சிறந்த கதைகளே உள்ளன. அதில், கம்பேக் கதைகள் மிக முக்கியமானது.

பிரித்வி ஷாவை சுற்றில் அவர் நீண்ட கால வெற்றியை பெற வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள் இருந்தால், அவருடன் அமர்ந்து முதலில் பேச வேண்டும். சோசியல் மீடியாவில் இருந்து மொத்தமாக வெளியேற அறிவுறுத்த வேண்டும். அதேபோல் மிகச்சிறந்த ஃபிட்னஸை எட்டுவதற்கான பயணத்தை தொடங்க வேண்டும். அதுதான் அவரை மீண்டும் வெற்றிக்கான பாதையில் கொண்டு செல்லும்.
பிரித்வி ஷாவை போன்ற திறமைசாலியால், தற்போதைய விஷயங்களை எளிதாக தூக்கி எறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாழ்க்கை முழுக்க சர்ச்சைகளில் நிறைந்த பீட்டர்சன், பிரித்வி ஷாவிற்கு அட்வைஸ் செய்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் வார்னேவுக்கு பின் அதிக சர்ச்சைகளில் சிக்கிய வீரர் பீட்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.