விசாகப்பட்டினம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து வீழ்த்தி இருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடும் கடப்பாரை அணி என்ற பெயரை பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே மிரளும் அளவுக்கு பவுலிங் மற்றும் பேட்டிங் வியூகத்தை வகுத்து இருந்தார் டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன். அவரது வரவால் டெல்லி அணி மாறிப் போயுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிட்டல்ஸ். இந்த முறை ஐபிஎல் தொடங்குவதற்கு முன் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் சமநிலை இல்லை என்றும், கேப்டனாக அதிக அனுபவம் இல்லாத அக்சர் படேல் இருக்கிறார் எனவும் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

டெல்லி அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரரான கே.எல். ராகுலும் டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாட மாட்டார் என்ற எண்ணமும் இருந்தது. 40 வயதைக் கடந்துவிட்ட ஃபாஃப் டு பிளெசிஸ், ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலிய இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் ஆகியோருடன் அபிஷேக் போரெல், அசுத்தோஷ் சர்மா என பேட்டிங் வரிசை ஒரு கலவையாக இருந்தது.
பேட்டிங் வரிசையில் எந்த ஒரு தனி வீரரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இருந்தது. பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் குல்தீப் யாதவ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் பந்துவீச்சாளர்களாக இருந்தனர். அக்சர் படேலுக்கு கேப்டன் பொறுப்பும் இருந்ததால் அவர் பந்துவீச்சில் சரியாக செயல்படுவாரா என்ற சந்தேகமும் இருந்தது.
இப்படி ஒரு கலவையான அணியாக இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் மிரட்டல் வெற்றிகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என நினைத்த நேரத்தில் அசுத்தோஷ் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்குப் பிறகு அவர் டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனுக்கு நன்றி கூறினார். அப்போதுதான் கெவின் பீட்டர்சனின் முக்கியத்துவம் வெளி உலகத்திற்கு தெரியத் துவங்கியது. அடுத்து இரண்டாவது போட்டியில் விசாகப்பட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாதகமான ஒரு ஆடுகளத்தில் அந்த அணியை அதிரடியாக ஆடி வீழ்த்தி இருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை அதிரடியாக துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களிலேயே எட்டி மிரட்டியது. அனைத்து பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியும் பெற்றது.
இதன் பின்னணியில்தான் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் வகுத்துத் தரும் திட்டங்கள் மற்றும் வீரர்களுக்கு அளிக்கும் ஊக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் எப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் கம்பீரின் வரவால் உற்சாகமடைந்து கோப்பை வென்றதோ, கிட்டத்தட்ட அதே ஒரு சூழ்நிலை டெல்லி கேப்பிட்டல்ஸ் முகாமிலும் உருவாகி இருக்கிறது. எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த முறை முக்கியமான அணியாக மாறி இருக்கிறது.
2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி யாரும் எதிர்பாராத வெற்றிகளை பெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை டெல்லி வென்றது.
டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பங்கு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
கெவின் பீட்டர்சனின் திட்டங்கள் மற்றும் ஊக்கம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு ஏற்படுத்திய தாக்கத்தை போல பீட்டர்சன் டெல்லிக்கு ஏற்படுத்துகிறார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த முறை முக்கியமான அணியாக உருவெடுத்துள்ளது.