IPL 2025: “நடராஜனுக்கு எங்க டீமில் இடமில்லை ஏன்னா” எகத்தாளமாக பேசிய DC ஆலோசகர் கெவின் பீட்டர்சன்
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த திறமையான டி20 வேகப்பந்துவீச்சாளரான நடராஜனுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம் இல்லை என அந்த அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் எகத்தாளமாக பதில் கூறியுள்ளார்.
நடராஜன் எல்லா விதத்திலும் சரியாக இருப்பதாகவும், ஆனாலும் அணியில் இம்பேக்ட் வீரருடன் 12 பேரைத்தான் ஆட வைக்க முடியும், அவரை எங்கே ஆட வைப்பது என்று சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடமே திருப்பி கேள்வி கேட்டு பீட்டர்சன் நையாண்டி செய்துள்ளார்.
இந்த பதிலைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சில் சொதப்பி வரும் நிலையில், நடராஜனுக்கு இடமில்லை என பீட்டர்சன் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஐபிஎல் தொடர் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக இருந்தார் நடராஜன். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் மீது மோகம் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகம், அவர்களை தக்க வைத்துக் கொண்டு நடராஜனை விடுவித்தது.
அவரை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது. அப்போது பலரும் நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில், அவரை அந்த அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கி இருந்தது. அதனால் அவரை டெல்லி அணி தங்களின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்தும் என நினைத்தனர். மிட்செல் ஸ்டார்க்குடன் இணைந்து நடராஜன் டெல்லி அணிக்கு பந்துவீச்சில் வலு சேர்ப்பார் எனவும் நினைத்தனர்.
ஆனால், அது எதுவும் நடக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியில் நடராஜன் ஓரம் கட்டப்பட்டார். மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், சமீரா மற்றும் மோகித் சர்மா ஆகியோர் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் மிட்செல் ஸ்டார்க்கை தவிர மற்ற மூவரும் சராசரியாகவே செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரை வீசிய முகேஷ் குமார், அந்த ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து, கடைசி ஓவர் வரை செல்ல வேண்டிய போட்டியை 19வது ஓவரிலேயே முடிவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தார். இது போன்ற காரணங்களால் டெல்லி அணி கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த நிலையிலும், கெவின் பீட்டர்சன் நடராஜனை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய முடியவில்லை, எந்த இடத்தில் தேர்வு செய்வது என நீங்களே சொல்லுங்கள் என கேள்வி கேட்டுள்ளார். இதைக் கேட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பலரும் முகேஷ் குமார் மற்றும் சமீராவை விமர்சித்து, அவர்களுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்யலாம் என கூறி வருகின்றனர்.
நடராஜன் இதற்கு முன் தனது யார்க்கர் வீசும் திறமையின் மூலம் ஐபிஎல் தொடர்களில் கடைசி ஓவர்களை துல்லியமாக வீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும், அவரை டெல்லி அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கிவிட்டு ஓரங்கட்டி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடராஜனுக்கு இத்தனை காலமாக தோள்பட்டையில் காயம் இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என்பதும், தற்போது கெவின் பீட்டர்சனின் பேட்டியால் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. நடராஜன் எல்லாவிதத்திலும் சரியாக இருப்பதாக பீட்டர்சன் கூறி இருப்பதன் மூலம் உடற்தகுதி அடிப்படையிலும் அவர் விளையாட தயாராக இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து, நடராஜனுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications