கொல்கத்தா: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணியில் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ரஹானே நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அணியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இதன் காரணமாக கேகேஆர் அணி புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் இருந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கேகேஆர் அணி தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை 23 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

அது மட்டுமில்லாமல் தமக்கு கேப்டன் பதவி வழங்கினால் அது மிகப்பெரிய கௌரவம் என்றும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்வேன் என்றும் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர், கேகேஆர் அணிக்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்து வந்தார். இந்த சூழலில் கேகேஆர் அணி கேப்டனாக ரஹானேவை நியமித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ரகானேவை அடிப்படை விலையான ஒன்றரை கோடி ரூபாய்க்கு கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. ரஹானே கேப்டன் ஆகவும் வெங்கடேஷ் ஐயர் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே கே ஆர் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர்," ரஹானே போன்ற ஒரு வீரரை கேப்டனாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்."
"அனுபவம் பக்குவம் என ஒரு தலைவருக்குரிய அனைத்து தகுதிகளும் ரகானே விடம் இருக்கின்றது. அதேபோன்று வெங்கடேஷ் ஐயர் எங்கள் அணியின் சிறந்த வீரர் அவருக்கும் தலைமை பண்புகள் நிறைய இருக்கிறது. இருவரும் இணைந்து எங்களுக்கு மீண்டும் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள்" என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய ரகானே, "கேகேஆர் அணியை வழிநடத்துவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். இது எனக்கு கிடைத்த கௌரவமாக பார்க்கின்றேன். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக கேகேஆர் அணி இருக்கின்றது. அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் பணியாற்றி சவால்களை சந்தித்து எங்களுடைய சாம்பியன் பட்டத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்வோம்" என்று ரஹானே கூறியுள்ளார். கேகேஆர் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆர்சிபி அணியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.