கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதி வந்த பிறகு பல அணிகளும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கிறார்கள். இதனால் ஆடுகளத்தின் தன்மை குறித்து கவனிக்காமல் ஒவ்வொரு அணியும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவுகிறார்கள்.
குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி இப்படித்தான் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி விட்டது. இந்த நிலையில் மற்ற அணிகளுக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ரகானே மாஸ்டர் கிளாஸ் ஒன்றை நடத்திருக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு பேசிய கே கே ஆர் அணி கேப்டன் ரஹானே, இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. வெற்றியின் வித்தியாசமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. இது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச தான் நினைத்தோம். ஆனால் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்யும் வகையில் மாறிவிட்டது.
நாங்கள் முதலில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு என் அணி வீரர்களிடம் இதைதான் சொன்னேன். கையில் விக்கெட்டுகளை வைத்துக் கொள்ளுங்கள். 11, 12 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் விளையாடுங்கள். அதன்பிறகு வரும் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ ரன்கள் அடிப்போம் என்று நான் கூறினேன். நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றோம்.
நிகழ்காலத்தில் நாம் எப்போதுமே இருக்க வேண்டும். இந்த வெற்றியின் மூலம் கூட நாங்கள் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கின்றோம். கடைசி ஐந்து ஓவரில் எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் அடித்தால் நமக்குத் தேவையான இலக்கு கிடைத்துவிடும். இன்று கூட ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் கடைசி ஐந்து ஓவரில் 50, 60 ரன்கள் அடித்தார்கள்.
இதன் மூலம் முதல் 15 ஓவர்கள் நார்மலாக விளையாடிவிட்டு கடைசி ஐந்து ஓவரில் அதிரடி காட்ட வேண்டும். முதலில் நாங்கள் 170 180 ரன்கள் எடுத்தாலே இந்த ஆடுகளத்தில் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் அமைத்த பார்ட்னர்ஷிப் காரணமாக எங்களுக்கு கூடுதலாக ரன்கள் கிடைத்தது.
அது மட்டுமில்லாமல் எங்கள் அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். மோயின் அலியால் இன்று பந்து வீச முடியவில்லை. நரேனும், வருண் சக்கரவர்த்தியும் அபாரமாக பந்து வீசினார்கள். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் வைபவ் மற்றும் ஹர்சித்துக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.