மும்பை: கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாண்ட் பண்டிட் விலகி இருக்கிறார். 2024ஆம் ஆண்டு இவரது பயிற்சியின் கீழ் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சந்தரகாண்ட் பண்டிட் விலகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை ஆகிய இரு அணிகளுக்கு பின் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி கொல்கத்தா. 2014, 2016 மற்றும் 2024 ஆகிய 3 சீசன்களில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பின் 2024ஆம் ஆண்டு கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் முக்கிய காரணம்.

ஏனென்றால் ரஞ்சி டிராபி தொடர்களில் பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக சந்திரகாண்ட் பண்டிட் செயல்பட்ட அனுபவம் மூலமாக, பல இளம் வீரர்களை கேகேஆர் அணிக்கு அழைத்து வந்தார். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர், வைபவ் அரோரா, ரஹானே, அனுகுல் ராய் உள்ளிட்ட பலரும் சந்திரகாண்ட் பண்டிட் கீழ் பயிற்சி பெற்றவர்கள்தான்.
இவர் கேகேஆர் அணியுடன் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக இணைந்தார். 2023ஆம் ஆண்டு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் காரணமாக, அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் நிறைவு செய்தது. இதன்பின் 2024ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கேகேஆர் அணி கைப்பற்றிய நிலையில், 2025ஆம் ஆண்டு 8வது இடத்தில் நிறைவு செய்தது.
மொத்தமாக ஆடிய 42 போட்டிகளில் ஆடியுள்ள கேகேஆர் அணி 22 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. இந்த நிலையில் கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திரகாண்ட் பண்டிட் அறிவித்துள்ளார். புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய பயணத்தை தொடங்க விரும்புவதால், சந்திரகாண்ட் பண்டிட் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேகேஆர் கூறியுள்ளது.
இதற்காக நன்றி தெரிவித்துள்ள கேகேஆர் அணி நிர்வாகம், அவரின் பங்களிப்பு விலை மதிப்பில்லாதது என்றும், அவரின் தலைமைப் பண்பும், ஒழுக்கமும் கேகேஆர் அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது. அதேபோல் எதிர்கால திட்டங்களுக்காக வாழ்த்துகளை கேகேஆர் நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த சீசனில் கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் பதவியை ராஜினாமா செய்து இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். தற்போது சந்திரகாண்ட் பண்டிட்-ம் விலகியுள்ள நிலையில், கேகேஆர் அணி யாரை அந்த பொறுப்புக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.