கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே வருண் சக்ரவர்த்தியை கதற விட்டு இருக்கிறார் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பிலிப்ஸ் சால்ட். இந்திய அணியில் சமீபத்தில் வருண் சக்ரவர்த்தி மிக முக்கிய இடத்தை பெற்று இருக்கிறார். இந்திய டி20 அணி மட்டுமல்லாமல் ஒரு நாள் அணியிலும் அவர் இடம்பிடித்து இருக்கிறார்.
33 வயதில் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகி இந்திய அணியின் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இப்படி அவரது வெற்றி நடை இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரிலும் அவர் அதை தொடர்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் இந்த முறை 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே அவரது பந்துவீச்சை சிதற விட்டார் பிலிப்ஸ் சால்ட்.
நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆடியது. அப்போது துவக்க வீரராக இறங்கிய பிலிப்ஸ் சால்ட், வருண் சக்ரவர்த்தி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மட்டும் 21 ரன்களை எடுத்தார். அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்தார் பிலிப்ஸ் சால்ட்.
அதன் பின்னர் வருண் சக்ரவர்த்தி தான் வீசிய இரண்டாவது ஓவரில் 6 ரன்களையும், மூன்றாவது ஓவரில் 5 ரன்களையும் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் வீசிய நான்காவது ஓவரில் 11 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதை எடுத்து அவர் மொத்தமாக நான்கு ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார்.
பிலிப்ஸ் சால்ட் அடித்த அடியால் முதல் ஓவரில் வருண் 21 ரன்களை விட்டுக் கொடுத்ததால் இந்த மோசமான பந்துவீச்சு செயல்பாட்டை பதிவு செய்தார். நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தை பிடித்தார் வருண் சக்கரவர்த்தி. அடுத்து வரும் போட்டிகளில் வருண் சக்ரவர்த்தி இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவாரா? என பார்க்கலாம்.