கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 6 விக்கெட்டு இழப்பிற்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறார்கள். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் குயிண்டன் டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரேன் ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் இளம் வீரர் அங்கிரிஸ் ரகுவின்சி ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

சிறப்பாக விளையாடிய கேப்டன் ரஹானே 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடங்கும். இதேபோன்று மறுமுனையில் இளம் வீரர் ஆங்கிரீஸ் ரகுவன்சி 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த நிலையில் இந்த இரண்டு வீரர்களும் குறுகிய இடைவேளையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.
ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைக்க கொல்கத்தா அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில போட்டிகளாக தடுமாறிய வெங்கடேஷ் ஐயர் இன்று 25 பந்துகளில் அரை சதம் கடந்தார். வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார் இதே போன்று ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு அதிரடி காட்டி 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.