இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவு பணி செய்தும் ரசிகர்களால் எப்போதும் விமர்சிக்கப்படும் வீரராகவே கே எல் ராகுல் திகழ்ந்தார். இந்திய அணி தொடக்க வீரராக களமிறங்குங்கள் என்று கூறினாலும், நடு வரிசையில் களமிறங்குங்கள் என்று கூறினாலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடுங்கள் என்று சொன்னாலும் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் செய்யும் சுயநலமற்ற கிரிக்கெட் வீரர் தான் கே எல் ராகுல்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே எல் ராகுல் பல முக்கிய போட்டிகளில் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே என்ற ராகுல் அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி வந்துவிட்டார்.

இந்த நிலையில் கே எல் ராகுலை டெல்லி அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. கடந்த அணிகளில் ஏற்பட்ட மனக்கசப்பால் தமக்கு கேப்டன் பொறுப்பை வேண்டாம் என்று கே எல் ராகுல் குறிப்பிட்டார். இந்த நிலையில் டெல்லி அணியில் இணைவது குறித்து கே எல் ராகுல் பேசியதை தற்போது பார்க்கலாம்.
"முதலில் ஏலம் நடைபெறும் போது எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏனென்றால் ஒரு வீரராக நாம் எந்த அணியில் சேரப் போகிறோம் என்பது தெரியாமல் காத்திருப்பது நிச்சயம் சுலபமான காரியம் கிடையாது. நான் பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். ஏலம் எவ்வளவு கணிக்க முடியாத படி செல்லும் என்று எனக்குத் தெரியும். ஏலம் இப்படித்தான் நடைபெறும் என்று நாம் சொல்லவே முடியாது."
"கடந்த மூன்று ஆண்டுகளாக நான் கேப்டனாக இருந்திருக்கிறேன். ஒரு அணியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற பயணத்தில் நான் பங்காற்று இருக்கின்றேன்.ஒரு அணியை தேர்வு செய்ய ஒவ்வொரு நிர்வாகமும் எவ்வளவு நெருக்கடிகளை சந்திக்கும் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்."
"அதேபோல் ஒரு வீரரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தோம் என்றால் அது இன்னும் கடினமாக இருக்கும். ஏனென்றால் உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையே இதை நம்பி தான் இருக்கின்றது. ஒவ்வொரு ஏலமும் வீரர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை கணிக்கவே முடியாதபடி மாற்றும். டெல்லி அணி தற்போது எனக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்."
"இது எனக்கு நான்காவது அல்லது ஐந்தாவது அணியாக இருக்கும் சரியாக தெரியவில்லை. ஆனால் டெல்லி அணியின் விளையாடுவதை நினைத்து எதிர்பார்ப்புடன் நான் இருந்தாலும் கொஞ்சம் பதற்றம் ஆகவும் இருக்கிறது. டெல்லி அணியில் ஸ்டார்க் ,அக்சர் பட்டேல், குல்தீப் போன்ற பலமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ராகுல் கூறியுள்ளார்.