டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை ராகுல் பூர்த்தி செய்தார்.
நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக தொடக்க வீரராக ராகுல் களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராகுல், டுபிளசிஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தது.

ஆனால் டுபிளசிஸ் பத்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். எனினும் தொடக்க வீரராக தமக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பவுண்டரி, சிக்சர் என விளாச ஸ்கோர் உயர்ந்தது. மறுபுறம் அபிஷேக் போரெல் மூன்று சிக்ஸர்,ஒரு பவுண்டரி என 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
கேப்டன் அக்சர் பட்டேல் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க கே.எல் ராகுல் அரை சதத்தை 35 பந்துகளில் பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய 60 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். எனினும் தொடர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.இதில் 14 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் கே எல் ராகுல் அடித்திருக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இது போல் மூன்று அணிகளுக்கு விளையாடி சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் கே எல் ராகுலுக்கு கிடைத்திருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர்கள் கில்கிறிஸ்ட், குயிண்டன் டி காக் சாதனையை ராகுல் முறியடித்திருக்கிறார். டி20 வரலாற்றில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் தற்போது ஏழு சதங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்திருக்கிறார். கோலி 243 இன்னிங்ஸ்களில் 8000 ரன்கள் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில், ராகுல் இதனை 224வது இன்னிங்சில் எட்டி அசத்தியிருக்கிறார்.