மும்பை: லக்னோ அணியில் இருந்து கேஎல் ராகுல் விலகி சென்றாலும், அவர் மீதான அன்பும், மரியாதையும் எப்போதும் இருக்கும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். கேஎல் ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு அந்த நேரத்தில் உணர்வுப்பூர்வமாக இருந்ததாக கூறிய அவர், எப்போதும் கேஎல் ராகுல் என் குடும்பத்தில் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை மைதானத்திலேயே வைத்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வெளுத்து வாங்கினார். 100 கேமராக்களுக்கு முன் ஒரு கேப்டனை சஞ்சீவ் கோயங்கா இப்படி விளாசியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சஞ்சீவ் கோயங்காவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதன் காரணமாக லக்னோ அணியில் இருந்து விலகும் முடிவை கேஎல் ராகுல் எடுத்ததாக பார்க்கப்பட்டது. இதன்பின் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணி தரப்பில் கேஎல் ராகுல் ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது கேஎல் ராகுலை வாங்குவதற்கு லக்னோ அணி ஒரு முறை கூட பேடிலை உயர்த்தவில்லை. இதன் மூலம் கேஎல் ராகுல் - சஞ்சீவ் கோயங்கா இருவருக்கும் இடையிலான மோதல் வெட்ட வெளிச்சமாகியது.
இந்த நிலையில் கேஎல் ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து சஞ்சீவ் கோயங்கா பேசி இருக்கிறார். அதில், கேஎல் ராகுல் இப்போது மட்டுமல்ல, எப்போதும் எனது குடும்பம் போன்றவர் தான். லக்னோ அணியை 3 ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தியதோடு, சிறந்த பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். அதனால் கேஎல் ராகுல் எந்த அணிக்கு சென்றாலும், அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கேஎல் ராகுலின் திறமை மீது எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. மைதானத்தில் கடுமையாக நடந்து கொண்டதற்கு சில காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் நாம் உணர்வுப்பூர்வமாக இருந்திருப்போம். அந்த நேரத்தில் உணர்ச்சிகள் வெளிப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அது எங்களின் உறவை பாதிக்கவில்லை என்று நம்பிகிறேன்.
லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருந்த போது, எங்களின் உரையாடல் வேறு மாதிரி இருக்கும். அதுவே கேஎல் ராகுல் வேறு அணிக்காக விளையாடும் போது, அப்படியான உரையாடல் நடக்கப் போவதில்லை. என்ன நடந்திருந்தாலும், கேஎல் ராகுல் மீதான அன்பும், மரியாதையும் கொஞ்சம் கூட குறையாது என்று தெரிவித்துள்ளார்.
3 சீசன்களில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள கேஎல் ராகுல், தொடர்ச்சியாக 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு லக்னோ அணியால் முன்னேற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வசம் செல்வதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.