மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா விளக்கம் கொடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அணி லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ். முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியை ஒருங்கிணைத்த ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் இருவரும் வேறு அணிகளுக்கு பறந்துவிட்டனர்.

இதனால் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கொண்டு வரப்பட்டார். இதனால் 3வது சீசனில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடி நம்பிக்கையை இழந்தது. லக்னோ அணி நிர்ணயித்த இலக்கை ஐதராபாத் அணி வெறும் 10 ஓவர்களுக்குள் சேஸிங் செய்து அதிர்ச்சி கொடுத்தது.
இதனை மைதானத்தில் இருந்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பார்த்து கொண்டிருந்தார். இதன்பின் ஆட்டம் முடிவடைந்து மைதானத்திற்கு வந்த சஞ்சீவ் கொயங்கா, கேப்டன் கேஎல் ராகுலை 100 கேமராக்களுக்கு முன்பாகவே விளாசி தள்ளினார். சஞ்சீவ் கொயங்காவிற்கு பதில் அளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஜஸ்டின் லாங்கர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஒரு கேப்டனுக்கே மரியாதை இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சஞ்சீவ் கொயங்கா உடனடியாக கேஎல் ராகுலை நேரில் அழைத்து சமாதானம் செய்து விருந்து கொடுத்து அசத்தினார். இருந்தாலும் லக்னோ அணி அடுத்த சீசனில் கேஎல் ராகுலை தக்க வைக்காது என்று தகவல் வெளியாகி வந்தன.
கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு செல்கிறார் என்றும், லக்னோ அணி ரோஹித் சர்மாவை வாங்க தீவிரம் காட்டுவதாகவும் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சஞ்சீவ் கொயங்கா பேசுகையில், உங்களின் கணிப்புகளுக்கும், வதந்திகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.
என்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் என் குடும்பத்தில் ஒருவர். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. ரீடென்ஷன் மற்றும் கேப்டன்சி குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. எல்லாவற்றையும் சிந்தித்து தான் முடிவு எடுக்க முடியும். ஆனால் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் குடும்பத்தில் கேஎல் ராகுல் மிக முக்கியமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்த லக்னோ அணியின் ஆலோசகர் பதவிக்கு ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை லக்னோ அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக மும்பை அணியுடன் இணைந்து பணியாற்றி வந்த ஜாகீர் கான், லக்னோ அணியின் ஆலோசகர் பதவிக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் லக்னோ அணி அடுத்தக் கட்டத்திற்கு சென்றிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் பயிற்சியாளர் மாற்றப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.