பெங்களூர்: ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேஎல் ராகுலிடம் கூறிய நிலையில், நடக்கும் என்று நம்புவோம் என்று பதில் அளித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லக்னோ அணியுடனான உறவை கேஎல் ராகுல் முறித்து கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ அணி முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. கடந்த சீசனில் கடைசி நேரத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பிளே ஆஃப் சுற்றுக்கு வர முடியவில்லை. அதிலும் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் 10 ஓவர்களில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முடித்தனர். இதனால் டென்ஷனான லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, கேப்டன் கேஎல் ராகுலை மைதானத்தில் வைத்தே கடுமையாக திட்டினார். 100 கேமராக்களுக்கு முன்பாகவே சஞ்சீவ் கொயங்கா கொந்தளித்தது பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனத்திற்குள்ளானது.
இதன்பின் கேஎல் ராகுலை நேரில் அழைத்து விருந்து வைத்து சமாதானம் செய்தார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், லக்னோ அணியுடன் கேஎல் ராகுல் உறவை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா கூறுகையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதியை இதுவரை பிசிசிஐ வெளியிடவில்லை.
அதேபோல் கேஎல் ராகுல் எனது குடும்பத்தில் ஒருவர். அதனால் ரீடென்ஷன் பற்றிய பேச்சுகள் தேவையில்லாத ஒன்று என்று தெரிவித்தார். இருந்தாலும் அடுத்த சீசனில் கேஎல் ராகுலை கேப்டன்சியில் இருந்து நீக்க லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் லக்னோ அணியுடனான உறவை முடித்து கொள்ள கேஎல் ராகுல் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை கேஎல் ராகுல் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை வாங்க ஆர்சிபி அணி முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கேப்டனாக கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல் ஆர்சிபி அணி கேப்டன் இல்லாமல் தத்தளித்து வரும் சூழலில், கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு சரியாக பொருந்துவார் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ள கேஎல் ராகுல், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவையும் பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மெகா ஏலத்தில் கேஎல் ராகுலை வாங்குவதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சிக்கும் என்றே சில தகவல் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் கேஎல் ராகுலிடம் ரசிகர்கள் ஒருவர், நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகன். நீண்ட காலமாக ஆர்சிபி அணியை தொடர்ந்து வருகிறேன். சில வதந்திகள் வருகின்றன. அதுகுறித்து எந்த கேள்வியும் உங்களிடம் எழுப்பப் போவதில்லை. ஆனால் மீண்டும் நீங்கள் ஆர்சிபி அணியில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு கேஎல் ராகுல், நடக்கும் என்று நம்புவோம் என்று பதில் அளித்துள்ளார்.