லக்னோ: ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அபாரமாக விளையாடுவதும் சொதப்புவதும் விளையாட்டில் ஒரு பகுதி தான். ஆனால் ஒரு வீரர் அதிக அளவு ரன்கள் அடித்தும், அவர் மெதுவாக விளையாடுகிறார். அவரால் தான் அணி தோற்றது என்று கூறுவது மூலம் ஒட்டுமொத்த அணியின் தவறையும் ஒரு வீரர் மீது சுமத்துவதாகும்.
இப்படி தான் கே எல் ராகுல் மீது ஆண்டு கணக்கில் பலரும் புகார்களை சுமத்தி வருகின்றனர். ராகுல் ஏதேனும் ஒரு போட்டியில் உண்மையாக தவறு செய்திருந்தாலும், அவர் சதம் அடித்தும் அணி தோற்கிறது என்று பலரும் ராகுலை குறை கூறி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள டாம் மூடி, ராகுல் சதம் அடித்திருக்கிறார். அவரை பாராட்ட யாரும் முன்வரவில்லை. அதேசமயம் மற்ற வீரர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்? யாரேனும் ஒருவர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடி இருக்கிறார்களா என்று ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த சூழலில் மற்ற அணிகள் எல்லாம் கேப்டன்களை தங்கத்தட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் இருந்தபோது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அனைவரும் முன்பும் கடுமையாக திட்டினார். அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு முன்பான வீரர்கள் தக்க வைக்கும் பட்டியலில் ராகுலை அவர் விடுவித்து, மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய் கொடுத்து பண்டை வாங்கினார்.
அப்போது அணியின் வெற்றிக்காக விளையாடும் வீரரை தேர்வு செய்ததாக ராகுலை அவர் மட்டம் தட்டினார். இந்த சூழலில் ராகுல் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார். நடப்பு தொடரில் ராகுல் 11 போட்டிகளில் 493 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆனால் மறுமுனையில் ரிஷப் பண்ட் 12 போட்டிகள் விளையாடி வெறும் 135 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் ராகுல் கடைசியாக விளையாடிய போட்டியில் 65 பந்துகளில் 112 ரன்கள் அடித்திருக்கிறார். ராகுல் ஒரு போட்டியில் அடித்த ஸ்கோரை விட பண்ட் 12 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் தான் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து வருகிறார்கள். ராகுலை மட்டம் தட்டி, தங்கம் போன்ற பேட்ஸ்மேனை தூக்கி சஞ்சீவ் கோயங்கா எரிந்து விட்டதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் ரிஷப் பண்ட்க்கும் லக்னோ அணி உரிமையாளர் உரிய மரியாதையை தரவில்லை என்றும் புகார் கூறி வருகின்றனர்.