பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் செய்த செயல் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் வாய் அடைக்கச் செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது நான்காம் வரிசையில் இறங்கிய கே.எல். ராகுல் நிலையாக நின்று அதிரடி ஆட்டம் ஆடினார்.

ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்து தனது அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 169 ரன்கள் எடுத்த நிலையில் அதில் 93 ரன்களை கே.எல். ராகுல் மட்டுமே எடுத்திருந்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை விளாசினார். இந்தப் போட்டியில் டெல்லி அணியும் 17.5 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு ஆடுகளத்தில் இருந்த கே.எல். ராகுல் தனது பேட்டை எடுத்து மைதானத்தில் நங்கூரமிட்டு நிறுத்துவது போல செய்தார். மேலும் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதைக் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் உறைந்து போய் நின்றனர். அதன் பிறகு அதற்கு என்ன காரணம் என ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு ராகுல் விளக்கமும் அளித்தார். எப்படி தன்னால் 93 ரன்கள் குவிக்க முடிந்தது என்றும் கூறினார்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு கே.எல். ராகுல் பேசியதாவது, "இந்த விக்கெட் சற்று சிக்கலானதாக இருந்தது. ஆனால் நான் விக்கெட் கீப்பிங் செய்யும்போது ஸ்டம்புக்கு பின்னே நின்றிருந்தது எனக்கு உதவியது. இந்த பிட்சில் பந்து எவ்வாறு வருகிறது என்பதை நான் அப்போது பார்த்தேன். இங்கு இரண்டு விதமான வேகத்தில் பந்து வரவில்லை, ஒரே வேகத்தில் தான் வந்து கொண்டிருந்தது. அதனால் எனது ஷாட்களை எங்கே அடிக்க வேண்டும் என எனக்குத் தெரிந்திருந்தது."
"நான் துவக்கத்திலேயே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த மைதானத்தில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்றால் எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். விக்கெட் கீப்பிங் எனக்கு அந்த அனுபவத்தை அளித்தது. இது எனது மைதானம், இது என்னுடைய வீடு. இந்த இடத்தை மற்றவர்களை விட எனக்கு நன்றாகவே தெரியும். இங்கு விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று கூறினார் கே.எல். ராகுல்.
கே எல் ராகுல் பெங்களூரை சேர்ந்தவர். சின்னசாமி மைதானத்தில் தான் தனது இளமைக்காலம் முழுவதும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதைத்தான் இவ்வாறு சொல்கிறார். மேலும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கே.எல். ராகுலை வாங்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த அணி அவரை ஏலத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
அதனால் தனது சொந்த மைதானத்தில் அதிக ஐபிஎல் போட்டிகளை விளையாடலாம் என்ற ராகுலின் ஆசையும் நிறைவேறாமல் போனது. இதை அடுத்து தான் அவர் இந்த போட்டியின் முடிவில் தனது பேட்டை தன்னுடைய மைதானமான பெங்களூர் சின்னசாமியில் நங்கூரமிட்டு நிறுத்தி "இது என்னுடைய மைதானம்" என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.