மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கள் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ஆல் கவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலையும் அந்த அணி விடுவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரையும் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களாக தக்க வைக்க உள்ளது. ஹர்ஷித் ரானாவை உள்ளூர் வீரராக தக்க வைக்க உள்ளது.

இந்த நான்கு வீரர்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்க வைக்கப்பட உள்ளனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி விடுவிக்க உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நீண்ட காலத்திற்கு பின் கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். எனினும், அப்போது அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தான் அணியில் முக்கிய மாற்றங்களை செய்தார் என்பதால் அவருக்கே அனைத்து பெருமைகளும் சென்று இருக்கிறது.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முயற்சிக்கும் என ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் ஆண்ட்ரே ரஸ்ஸலை கொல்கத்தா அணி விடுவிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஆலோசகராக டிவைன் பிராவோ நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளியேற்றம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை ஆண்ட்ரே ரஸ்ஸலை மீண்டும் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்க முயற்சிக்கலாம்.