ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த போட்டியே அவரது சர்வதேச அறிமுகமாகவும் அமையும்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷித் ரானா, இந்திய அணிக்காக ஆடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் அந்த அணி ஹர்ஷித் ரானாவை உள்ளூர் வீரராக தக்க வைக்க திட்டமிட்டு இருந்தது.

ஏலத்துக்கு முன் ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்கலாம். அதில் அதிகபட்சமாக இரண்டு உள்ளூர் வீரர்களை தக்க வைக்கலாம் என்ற விதி உள்ளது. உள்ளூர் வீரர்களை தக்க வைக்க அதிகபட்சமாக நான்கு கோடி ரூபாய் சம்பளம் அளித்தால் போதுமானது என்பதால் அந்த அணி ஹர்ஷித் ரானாவை குறைந்த தொகைக்கு தக்க வைக்க திட்டமிட்டு இருந்தது.
ஆனால், தற்போது அவர் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆகிவிட்டால் அவர் சர்வதேச வீரராகவே கருதப்படுவார். அவரை உள்ளூர் வீரராக தக்க வைக்க முடியாது. அக்டோபர் 31ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை அறிவிக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹர்ஷித் ரானா அக்டோபர் 31 வரை இந்த ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆடியவராக இருப்பார்.
ஒரு போட்டியில் ஆடினாலும் ஹர்ஷித் ரானா சர்வதேச வீரராகவே கருதப்படுவார். அவரை உள்ளூர் வீரராக தக்க வைக்க முடியாது. அதனால் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் சோகத்தில் உள்ளது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களை அந்த அணி தக்க வைக்க விரும்புகிறது.
அவர்களை தக்க வைக்க அந்த அணி பெருமளவில் தொகையை செலவிட வேண்டி இருக்கும். இந்த நிலையில் சிறப்பாக பந்து வீசி வரும் ஹர்ஷித் ரானாவை தக்கவைக்க கொல்கத்தா அணி மேலும் அதிக பணத்தை செலவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.