மும்பை: ஒவ்வொரு ஐபில் சீசனிலும் ஒரு அடிமை அணி மற்ற அணிகளுக்கு சிக்கும். அதாவது அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என எதிலுமே சரியாக செயல்படாது. மற்ற அணிகள் பலமாக இருக்கும் நிலையில் அந்த அணி கடுமையாக தடுமாறும்.
அப்படி இருக்கும் போது அந்த அணியை அனைத்து அணிகளும் போட்டு தாக்குவார்கள். இப்படி ஐபிஎல் தொடர் தொடங்கி 17 சீசன்கள் வரை சிஎஸ்கே அணி தான் மற்ற அணிகளை அடித்து துவைத்து இருக்கிறது.

ஆனால் தற்போது சிஎஸ்கே அணி மற்ற அணிகளுக்கு அடிமை போல் மாறிவிட்டது. விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 103 ரன்களில் ஆட்டம் இழந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிஎஸ்கே அணியின் வரலாற்றில் மிக மோசமான தோல்வி இது. பவர் பிளேவில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ததை பார்த்தால் ஏதோ டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி எடுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகளுக்காக சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவது போல் தோன்றுகிறது. இது எல்லாம் சரிப்பட்டு வராது. வெற்றி பெற வேண்டுமென்றால் யாருமே எதிர்பார்க்காத ஒரு ஐடியாவை செயல்படுத்துங்கள்.
தற்போது ருதுராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக ஏன் விலை போகாத வீரர்களை அணியில் எடுக்கக்கூடாது. பிரித்விஷா போன்ற வீரர்களை இப்போது எடுத்து பயன்படுத்தினால் என்ன? உத்திகளை வகுப்பதில் கூடவா சிஎஸ்கே அணி இவ்வளவு மோசமாக செயல்படும் என்று ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படும் நிலையில் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது படுமோசமான தோல்வியை சிஎஸ்கே தழுவியிருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணி வரும் 14ஆம் தேதி லக்னோ அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.