டெல்லி: ஐபிஎல் தொடரில் வீரர்கள் மோதிக் கொள்வது என்பது முதன்முறை கிடையாது. ஒரு வீரர் இன்னொரு வீரரை அறைவது என்பதும் புதிது கிடையாது. ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹர்பஜன்சிங்குக்கு தடை விதிக்கப்பட்டது இந்த தருணத்தில் நேற்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து டெல்லி அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு இரு அணி வீரர்களும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குல்தீப் யாதவும், ரிங்கு சிங்கும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று ரிங்கு கன்னத்தில் ஓங்கி வேகமாக குல்தீப் அறைந்தார். இதனால் திடீரென்று சிரித்துக் கொண்டிருந்த ரிங்கு சிங் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து குல்தீப் யாதவை பார்த்தார்.
அப்போது மீண்டும் பேசிக் கொண்டிருந்த போது 2வது முறையாக மீண்டும் குல்தீப் திடீரென்று அறைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. குல்தீப் யாதவ் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பி இருக்கிறது. ரிங்கு சிங்கை அவர் ஏன் அடித்தார்? இல்லை இது விளையாட்டுத்தனமாக தான் நடைபெற்றதா இல்லை சீரியஸாக அடித்தாரா என்று எதுவும் தெரியவில்லை.
எனினும் வீரர்களை அறைவது என்பது விதிகளுக்கு புறம்பானது. இதனால் குல்தீப் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே டெல்லி அணி முக்கியமான கட்டத்தில் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் குல்தீப் யாதவ்க்கு தடை விதிக்கப்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை டெல்லி அணிக்கு ஏற்படுத்தும்.
இந்த நிலையில் குல்தீப் யாதவ் பேட்டிங் செய்ததை கிண்டல் செய்ததால் தான் ரிங்கு சிங் அவர் அடித்ததாக தெரிகிறது. இது குறித்து குல்தீப் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரிங்கு சிங்கை விட குல்தீப் யாதவ் சீனியர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.