மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி தங்களுடைய ஐந்தாவது தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 10 போட்டிகளில் அவர்கள் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் முதலில் பந்து வீசியது சரியான முடிவு என்றுதான் நினைக்கின்றேன். ஏனென்றால் எங்கள் அணியின் பேட்டிங் பலமானது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

இதனால் பௌலர்கள் சிறப்பான கள சூழலில் பந்து வீச வாய்ப்பு தர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இது எங்களுக்கான நாள் இது கிடையாது. மற்ற அணிகள் எல்லாம் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எனவே நாங்கள் சரியாக விளையாடுகிறோமா என்று கேள்வி கேட்காமல் மற்றவர்களுக்கு பாராட்டுக்களை நாம் தெரிவிக்க வேண்டும்.
ஒரு அணியாக சில சரிவு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அது எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தற்போது எங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. நாங்கள் அனைத்தையும் சிம்பிளாக வைத்திருக்கின்றோம். நாங்கள் எதையும் பெரியதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது கிடையாது.
இது போன்ற நீண்ட தொடரில் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக நடக்கவில்லை என்றால் உடனே அந்த வீரர் குறித்து நாம் கேள்விகளை கேட்கின்றோம். அதை நான் செய்யக்கூடாது என்று நினைக்கின்றேன். ஒரு அணி நன்றாக விளையாடும் போது அது பற்றி எந்த கேள்வியும் வருவதில்லை.
கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாடும் விளையாட்டு ஆகும். தனிப்பட்ட வீரர்களை எப்போதும் குறிப்பிட்டு கேள்வி கேட்பது என்பது சரியான விஷயம் கிடையாது. மாயங் யாதவ் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து பந்து வீசி இருக்கிறார். அவரைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி முதல் போட்டி என்பதால் அவர் தனது பழைய ஸ்டைலில் பந்து வீச முயற்சி செய்கிறார். இனிவரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி சிறந்த வீரராக மாறுவார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.