லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. லக்னோ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அபாரமாக பந்துவீசி லக்னோ அணியை 166 ரன்களுக்குள் சுருட்டியது.
இதை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி மூன்று பந்துகள் எஞ்சிய நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றாவது தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் இன்றைய போட்டியில் ஒரு 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று நினைக்கின்றேன். எப்போது எல்லாம் இன்றைய ஆட்டத்தில் எங்கள் பக்கம் காற்று வீசியதோ, அப்போதெல்லாம் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம்.
இதனால் ஒவ்வொரு முறையும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதனால் நாங்கள் கூடுதலாக ஒரு 15 ரன்களை நிச்சயமாக அடித்திருக்க வேண்டும்.
என்னுடைய ஆட்டம் திருப்தி அளிக்கிறது. தொடர் போகப்போக என்னுடைய பேட்டிங்கும் கொஞ்சம் முன்னேறுவதை உணர்கின்றேன். சில சமயம் என்னால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நான் கவனம் செலுத்தி வருகின்றேன். ரவி பிஸ்னாய்க்கு ஒரு ஓவரை கடைசி கட்டத்தில் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து பல வீரர்களுடன் விவாதித்தேன்.
ஆனால் இன்று எங்களால் ரவி பிஸ்னாய்க்கு கடைசி கட்டத்தில் ஓவர் வழங்க முடியவில்லை. பவர் பிளேவில் நாங்கள் சரியாக பந்து வீசுவது கிடையாது. சில விஷயங்களில் நாங்கள் சரி செய்து விளையாடினால், நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் நிறைய பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்கின்றோம். இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைக்கின்றோம் என்று ரிஷப் பன்ட் கூறியுள்ளார்.