லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் சேசிங்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சொதப்பியது. 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில், லக்னோ அணியால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். அவர் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரது பேட்டிங் மோசமாக இருந்தது தான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் போட்டியின் முடிவில் தோல்விக்கு காரணம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தான் என்கிற ரீதியில் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார். இந்தப் போட்டியின் தோல்விக்கான காரணமாக பந்துவீச்சாளர்களைக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணியின் பந்துவீச்சில் ஆவேஷ் கான் மற்றும் மயங்க் யாதவ் அதிக ரன்களை வாரி இறைத்தனர். மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆவேஷ் கான் 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவர்கள் இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இது பற்றிப் பேசிய ரிஷப் பண்ட், "எங்களுக்கு அதிக ரன்களைச் சேசிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. நாங்கள் பந்துவீசிய போது சரியான தூரத்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை. இதெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதி தான். முக்கியமான நேரங்களில் கேட்ச்சுகளை தவறவிட்டால் இப்படித்தான் நடக்கும். நாங்கள் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். எனவே நம்பிக்கை உள்ளது."
"எங்களின் டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்து வருகிறது. அனைத்து சுமையையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது செலுத்த முடியாது. அனைத்து போட்டிகளிலும் அவர்களே அனைத்தையும் வென்று கொடுக்க வேண்டும் என நினைக்க முடியாது. ஆனால் நீங்கள் முன்பே சொன்னது போல, நிறைய ரன்கள் எங்களுக்குச் சேசிங் செய்ய வேண்டி இருந்தது" என இந்த தோல்விக்கான காரணத்தை பந்துவீச்சாளர்கள் மீது சுமத்தினார் ரிஷப் பண்ட்.
இதை அடுத்து ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். தனது பேட்டிங்கில் சொதப்பிவிட்டு, தோல்விக்கான பழியை பந்துவீச்சாளர்கள் மீது சுமத்துவது சரியல்ல என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.