லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியது. ஆனால், அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. தான் விளையாடிய 14 போட்டிகளில் ஆறு வெற்றிகள் மட்டுமே பெற்றது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிக மோசமாக பேட்டிங் செய்தது அந்த அணி தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்தது.
அதே சமயம், அந்த அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அதற்கு ஒரு காரணம், அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பலரும் ஐபிஎல் தொடருக்கு முன்பும், தொடரின் இடையிலும் காயத்தில் சிக்கினர். அதனால், பந்துவீச்சு வியூகத்தை சரியாக வகுக்க முடியாமல் அந்த அணி தோல்விகளை சந்தித்தது.

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் செயல்பாட்டின் மீது அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அணி நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல பயிற்சியாளர்கள் நீக்கப்படுவார்கள் எனவும், குறிப்பாக ஜாகிர் கான் மீது அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாகத்தான் ஜாகிர் கான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகிர் கான் அந்த அணியின் ஏலத்தின் போது நியமிக்கப்படவில்லை. எனவே, அந்த ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ததற்கும், ஜாகிர் கானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனினும், அவர் பந்துவீச்சு வியூகத்தை சரியாக வகுத்துக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் தான் நீக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் 2024 ஐபிஎல் தொடர் முதல் அந்த அணியுடன் பயணித்து வருகிறார். 2024 ஆம் ஆண்டிலும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. 2025 ஆம் ஆண்டிலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. எனவே, ஜஸ்டின் லாங்கரின் பதவி தப்பிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இறுதியாக, அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தக்கவைக்கப்படுவாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.