மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, சிஎஸ்கே போன்ற அணிகள் வீரர்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும். இதனால் தான் அந்த அணி இவ்வளவு வெற்றியை பெற்றது. ஆனால் சில அணிகள் வீரர்களை பெரிய அளவில் மதிக்காது. இதனால் தான் பல வீரர்கள் பல அணிகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தான். கேஎல் ராகுலை அனைவரின் முன்பும் அவமரியாதை செய்த லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா, ஏலத்திற்கு முன்பு ராகுலை வெளியேற்றினார். இந்த சூழலில் 27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பண்டை லக்னோ அணி வாங்கியது.

ரிஷப் பண்டும் டெல்லி அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அணியை விட்டு வெளியேறினார். அது மட்டுமில்லாமல் லக்னோ அணி இவ்வளவு பெரிய தொகை கொடுத்திருப்பதால் பண்ட் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல் லக்ன அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு குட்டையை குழப்பி இருக்கிறார்.
ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் பங்கேற்று பேசிய லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கொடுத்த பேட்டி ஒன்றுதான் பண்டை மிரள வைத்திருக்கிறது. லக்னோ அணி குறித்து பேசிய உரிமையாளர் கோயங்கா, இந்த மெகா ஏலம் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது என்பது தான் என்னுடைய உள்ளுணர்வாக இருக்கிறது.
நாங்கள் எங்கள் அணியின் நடு வரிசை பலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அது மட்டும் அல்லாமல் ஃபினிஷிங்கும் அபாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் மூன்றாவது வீரர்களில் இருந்து எட்டாவது வீரர் வரை பலமான அணியை நாங்கள் கட்டமைத்தோம். அது மட்டுமல்லாமல் என்னுடைய இரண்டாவது ஆசை முழுக்க முழுக்க இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ஒரு பந்துவீச்சு படையை அமைக்க வேண்டும் என்பதுதான்.
சர்வதேச பவுலருக்கு பதிலாக இந்திய பவுலர்கள் மற்றும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் என்பதுதான் எங்களுடைய இலக்காக இருந்தது. எங்கள் அணியில் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் நாங்கள் யோசிக்கவில்லை. எங்கள் அணியில் தற்போது நான்கு லீடர்கள் இருக்கிறார்கள்.
ரிஷப் பண்ட், பூரான்,மார்க்கரம் மிட்செல் மார்ஸ் ஆகியோர் இருப்பதால் யுக்திகளை அமைப்பதிலும், நடைமுறை படுத்துவதிலும் எந்த சிக்கலும் இருக்காது. போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனம் இருக்கும் வீரர்களை தான் நாங்கள் விரும்பினோம்.ரிஷப் பண்ட் போன்றவருக்கு வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இம்முறை நாங்கள் நல்ல அணியை கட்டமைத்திருக்கிறோம்.
ஒட்டுமொத்தமாக அணியின் பேலன்ஸும் நன்றாக இருக்கிறது. இந்த ஏலத்தில் எந்த அணியுமே பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்கவில்லை என்று சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார். ரிஷப் பண்ட் தான் அடுத்த கேப்டன் என்று கூறாமல், நான்கு வீரர்கள் சேர்த்து குறிப்பிட்டு இருப்பதன் மூலம் பண்ட்க்கு அடுத்த கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.