மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் மோதல் வர வாய்ப்பு உள்ளதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் என்ற அணியை நடத்தி வந்தார். அந்த அணியின் கேப்டனாக 2016 இல் தோனியின் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது அந்த அணி தோல்விகளை சந்தித்ததால் சஞ்சீவ் கோயங்காவுக்கு தோனி மீது அதிருப்தி ஏற்பட்டது.

அதை பொதுவெளியிலும் வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து தோனி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல 2024 ஐபிஎல் தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் கே எல் ராகுலுக்கும், சஞ்சீவ் கோயங்காவுக்கும் கசப்பான சம்பவம் நடந்தது. லக்னோ அணி தோல்வி அடைந்தபோது ராகுலை மைதானத்தில் வைத்து திட்டி இருந்தார் சஞ்சீவ் கோயங்கா.
இதை அடுத்து ராகுல் அந்த அணியில் இருந்து விலகினார். தற்போது ரிஷப் பண்ட்டை லக்னோ அணி வாங்கி இருக்கிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு பண்ட்டை வாங்கினார் சஞ்சீவ் கோயங்கா. அவரை கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்தார்.
ஏற்கனவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகி ஏலத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், சஞ்சீவ் கோயங்கா போன்ற ஒரு அணி உரிமையாளருடன் ரிஷப் பண்ட் இணக்கமாக செயல்பட முடியுமா? என ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கி அவரை கேப்டனாக நியமிக்க விரும்பியதாகவும், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி கொடுத்து வாங்கியதால், லக்னோ அணி தயக்கத்தில் அவரை வாங்காமல் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து ரிஷப் பண்ட் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டபோது இவரையாவது வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தில் 27 கோடி கொடுத்து சஞ்சீவ் கோயங்கா பண்ட்டை வாங்கியதாக கூறப்படுகிறது.