விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடரின் முதல் திரில்லர் போட்டியாக டெல்லி, லக்னோ அணி மோதிய ஆட்டம் அமைந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் அடித்தது.
இந்த ஸ்கோரை எட்ட முடியாமல் டெல்லி அணி 65 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் டெல்லி அணியின் அசுதோஷ் சர்மா மற்றும் விபராஜ் நிகம் ஆகியோர் அபாரமாக விளையாடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், அனைவரும் தயாராகி இருங்கள். இதை ஒரு பழக்கமாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் என்னுடைய கேப்டன்சியில் போட்டிகள் இப்படித்தான் இருக்கும். நான் எடுக்கும் முடிவு கூட சில சமயம் நன்றாக இருக்கும். சில சமயம் இப்படி கூட அமையலாம்.
எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில சமயம் ரசிகர்கள் என் மீது கோபப்பட வாய்ப்பு இருக்கிறது. தற்போது நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே யாரும் எங்களை ஏதும் சொல்ல மாட்டார்கள். நான் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளை பார்த்திருக்கின்றேன். பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்த பின் போட்டியை வெற்றி பெறுவது என்பது இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.
ஆனால் கிரிக்கெட் என்பது தற்போது மாறி வருகிறது. எனவே களத்தில் கடைசிவரை நின்று விளையாடுங்கள். உங்களுடைய திறமையை வெளிக்காட்டுங்கள். நிச்சயம் வெற்றி பெறலாம். ஒரு பவுலராக தற்போது போட்டி மூளைக்கு சம்பந்தமானதாக மாறிவிட்டது. உங்களுடைய பந்துவீச்சில் அதிக ரன்கள் போகும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் நீங்கள் விக்கெட்டை எடுப்பீர்கள். எனவே இது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். லக்னோ அணி வீரர்கள் முதல் ஆறு ஓவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் ஆரம்பத்தில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம் என நினைக்கின்றேன். சில கேச் வாய்ப்பையும் நாங்கள் தவறவிட்டோம். ஆனால் கடைசி ஏழு ஓவர்களில் நாங்கள் அபாரமாக செயல்பட்டு லக்னோ அணியின் ரன்குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினோம்.
ஒரு சமயம் லக்னோ அணி 250 ரன்னுக்கு மேல் அடிப்பார்கள் என நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 ரன்கள் சுற்றி தான் அடிக்கவிட்டோம். இதன் மூலம் எங்கள் அணி வீரர்கள் நம்பிக்கை பெற்றார்கள். எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்களின் திறமை எங்களுக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற நெருக்கடியான போட்டியை தொடரில் முதலிலே பார்த்து விட்டோம். விப்ராஜ் நிகம், என்னுடைய பாராட்டுக்கள். இதே போல் இந்த தொடர் முழுவதும் உங்கள் செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.