லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் தடுமாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதேபோன்று ஏய்டன் மார்க்கரம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து லோகி பெகுர்சன் பந்துவீச்சில் திரும்பினார். ஒரு கட்டத்தில் அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த பண்ட் பேட்டிங் வரிசையை தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்தார். மெக்ஸ்வெல் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டபோது பண்ட் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் அணி சரிவை நோக்கி சென்றாலும் நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஸ் பதோனி ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர்.
பூரான் தனது வழக்கமான அதிரடியை காட்டி ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் என 30 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இன்னும் முக்கிய கட்டத்தில் சாஹல் பந்துவீச்சில் பூரான் ஆட்டம் இழந்தது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆயுஷ் பதோனியும் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் டேவிட் மில்லர் வெறும் 18 பந்துகளில் 19 ரன்கள் தான் சேர்த்தார்.
இந்த நிலையில் முன்னாள் எஸ் ஆர் எச் வீரர் அப்துல் சமத் இன்றைய ஆட்டத்தில் அதிரடி காட்டினார். இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டர் என 12 பந்துகளின் அவர் 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 171 ரன்கள் என கௌரவமான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் அணி பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக பணத்திற்கு சென்ற பண்ட் தற்போது தொடர்ந்து தடுமாறி வருகிறார். டெல்லி அணிக்கு எதிராக 0, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 என அடித்து வந்த பண்ட் தற்போது வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்.