ஐதராபாத்: டி20 போட்டிகளில் ஒரு காலத்தில் 190 ரன்கள் எல்லாம் மிகப்பெரிய இலக்காக பார்க்கப்பட்டது. அதை சேஸிங் செய்யும் அணி கடுமையாக தடுமாறும். ஆனால் தற்போது காலம் மாற மாற ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் இம்பேக்ட் வீரர் என கூடுதல் பேட்ஸ்மேன் களமிறங்கும் விதியும் வந்த பிறகு 190 ரன்கள் என்ற இலக்கெல்லாம் ஒரு இலக்காகவே யாரும் மதிப்பதில்லை.
இன்று கூட சன்ரைசர்ஸ் அணி 191 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால் அதனை லக்னோ அணி 16 புள்ளி ஒரு ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி இருக்கிறது. ஹைதராபாத் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக உள்ள நிலையில் 190 ரன்கள் என்று இலக்கு தற்போது தோல்வியை பெரும் இலக்காக மாறி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ், "முதல் போட்டிக்கு வழங்கப்பட்ட ஆடுகளமும் இன்றைய போட்டிக்கு வழங்கப்பட்ட ஆடுகளமும் வித்தியாசமானவை. எனினும் இன்றைய ஆட்டத்திலும் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முற்பட்டோம். ஆனால் எங்களால் அது முடியவில்லை."
"லக்னோ அணி இன்று பிரமாதமாக பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் எங்களுக்கு தரப்பட்ட ஆடுகளும் உலகின் மிகச்சிறந்த பேட்டிங் விக்கெட். இன்று இரண்டாவது மிகச் சிறந்த பேட்டிங் விக்கெட் என நான் கருதுகிறேன். இந்த போட்டி சென்ற விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. லக்னோ பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எனினும் 190 ரன்கள் என்ற இலக்கை தொட நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம்."
"எங்கள் அணியில் ஏதேனும் ஒரு வீரர் 20 ஓவர் முழுவதும் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். முதல் போட்டியில் இசான் கிஷன் பேட்டிங் செய்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அப்படி செய்ய தவறிவிட்டோம். எங்கள் அணியில் சில வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் எங்களுடைய வீரர்களுக்கு எப்போதும் துணை நிற்கின்றோம். எங்கள் அணியில் ஒரு வீரர் நல்ல தொடக்கத்தை பெற்றால் அவர்கள் கடைசி வரை நின்று ஆட அறிவுறுத்தி இருக்கின்றோம்."
"எங்கள் அணியில் பேட்டிங் வரிசையில் எட்டு வீரர்கள் வரை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே யாரும் 50, 60 பந்துகளை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வது கிடையாது. களத்திற்கு சென்று தாக்கத்தை ஏற்படுத்துங்கள். கைகூடவில்லை என்றால் அது குறித்து பிறகு யோசிப்போம் என்று தான் சொன்னோம். இன்று நாங்கள் என்ன சரியாக செய்திருக்கலாம் என்பது குறித்து விவாதிப்போம். இது மிக நீண்ட தொடராகும். கடந்த ஆட்டம் மிகவும் சிறப்பானதாகவும், இன்றைய ஆட்டம் எங்களுக்கு தோல்வியும் கொடுத்திருக்கிறது. இதுதான் ஐபிஎல் தொடரின் மகிமை" என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.