ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட அதிரடி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். நிக்கோலஸ் பூரன் இதுவரை ஐபிஎல் தொடரில் நான்கு முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் பிரேசர் மெக்கர்க் உள்ளனர். அவர்கள் இருவரும் தலா மூன்று முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து இருக்கின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 269.23 ஆகும். ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்து இருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து இருந்தார்.
191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் மோசமான துவக்கத்தை அளித்தார். அவர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் மற்றொரு துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.
அவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தார். நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து இருந்தார். இவர்கள் அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றி எளிதானது. லக்னோ அணி 16.1 ஓவரில் வெற்றி இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டியது.
செய்தி சுருக்கம்