மும்பை: டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்து பல்வேறு டி20 சாதனைகளை உடைத்து இருந்தார். ஆனால், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து விடுவிக்கும் என்ற தகவல் கசிந்து உள்ளது. மிகப்பெரிய டி20 சாதனை செய்த ஆயுஷ் பதோனியை அந்த அணி நீக்க உள்ளதால் மற்ற ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் வாங்க இப்போதே பெரும் தொகையை ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளன.
டெல்லி பிரிமியர் லீக் தொடரில் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இணைந்து 286 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன் சேர்த்தனர். பிரியன்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்தார். இதுவே டி20 வரலாற்றில் மிகப்பெரிய கூட்டணி ஆகும்.

இவர்கள் இருவரும் இணைந்து 286 குவித்து இருந்தனர். அதிலும் ஆயுஷ் பதோனி மட்டுமே 19 சிக்ஸ் அடித்திருந்தார். அதன் மூலம் அவர் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை செய்தார். முன்னதாக கிறிஸ் கெயில் ஒரே போட்டியில் 18 சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் ஆயுஷ் பதோனி.
ஆயுஷ் பதோனி ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் பல முன்னணி வீரர்கள் இருப்பதால் அவர்களை மட்டுமே அந்த அணியால் ஏலத்திற்கு முன் தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதன் காரணமாக உள்ளூர் அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ள ஆயுஷ் பதோனியை நீக்க முடிவு செய்துள்ளது அந்த அணி. தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சர்வதேச அனுபவம் உள்ள வீரர்களான கே எல் ராகுல், க்விண்டன் டி காக், க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர். இவர்கள் தவிர தேவ்தத் படிக்கல் மற்றும் அதிக வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்ட மயங்க் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் ஆயுஷ் பதோனியை லக்னோ அணி விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம், ஆயுஷ் பதோனியை ஐபிஎல் ஏலத்தில் எத்தனை பெரிய தொகை கொடுத்தும் வாங்கலாம் என சில ஐபிஎல் அணிகள் திட்டமிட்டு இருக்கின்றன.
ஆயுஷ் பதோனி உள்ளூர் போட்டியில் தான் இந்த சாதனையை செய்து இருக்கிறார். அவரால் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் பெரிதாக சாதிக்க முடியாது என்ற ஒரு வாதமும் உள்ளது. ஆனால், இதே டெல்லி பிரிமியர் லீக் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்க்கும்போது ஆயுஷ் பதோனி செய்த சாதனை முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.