மும்பை: 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில நாட்களுக்கு முன் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை நேரில் சந்தித்திருந்தார் கே எல் ராகுல். அப்போது கே எல் ராகுல் தாமாகவே கேப்டன் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆக்ரோஷமான, கடைசி வரை போராடும் ஒரு கேப்டன் தான் தங்கள் அணிக்கு தேவை என கருதுவதால் கே எல் ராகுலை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அந்த அணியின் வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 2024 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து சஞ்சீவ் கோயங்கா கடிந்து கொண்ட சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது.

தோனியையே கேப்டன் பதவியில் இருந்து விலக வைத்தவர் தான் இந்த சஞ்சீவ் கோயங்கா என்பதால் கே எல் ராகுல் அதேபோல இவரிடம் சிக்கி இருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடர்களில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தோனி இடம்பெற்று இருந்தார். சஞ்சீவ் கோயங்கா அந்த அணியின் உரிமையாளராக இருந்தார். 2016 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டன் ஆகவும் இருந்தார் தோனி.
அந்த சீசனில் புனே அணி சரியாக செயல்படாததை அடுத்து தோனியின் கேப்டன்சியை மிக வெளிப்படையாக விமர்சித்து இருந்தார் சஞ்சீவ் கோயங்கா. பின்னர், தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 2017 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது.
அப்போது மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. அது குறித்து சமீபத்தில் சஞ்சீவ் கோயங்கா அளித்த பேட்டியில், அந்த இறுதிப் போட்டியில் தோனி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை தவிர மற்ற வீரர்களுக்கு அனுபவம் இல்லை எனவும், மும்பை இந்தியன்ஸ் அணி அந்த சூழ்நிலையில் தங்கள் அணிக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் கூறி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த எந்த சூழ்நிலையிலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத குணம் தனது அணிக்கும் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார்.
இதன் மூலம் அவர் தனக்கு கடைசி வரை போராடும் ஒரு கேப்டன் தான் வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தபோது கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே வைத்து கடுமையாக பேசியிருந்தார் சஞ்சீவ் கோயங்கா. அப்போது அந்த விவகாரம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்ததை அடுத்து அவருக்கு விருந்து வைத்து சமாளித்தார். இந்த நிலையில் தான் தற்போது கே எல் ராகுலை கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.