சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர்கள் ஆன தோனி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி. 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த அணி இதுவரை தான் ஆடிய போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதிலும் கடைசி ஐந்து போட்டிகளிலும் வரிசையாக தோல்வியை சந்தித்து வரலாற்றிலேயே மிக மோசமான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அந்த அணியின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.

தோனி கேப்டனான பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து சிஎஸ்கே அணி பந்து வீசியபோதும் எந்தவிதமான தாக்கமும் அதில் இல்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் பவர் பிளேவில் பந்து வீச அழைக்கப்பட்டார். அதுவும் தவறான முடிவாகவே அமைந்தது. மேலும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் பந்து வீசினால் விக்கெட் விழும் என்ற விஷயமும் இந்த போட்டியில் நடக்கவில்லை.
அது ஏன் என்பது பற்றி மனோஜ் திவாரி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இது பற்றி மனோஜ் திவாரி பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் துவக்கத்திலிருந்து தங்களது திட்டமிடலை மாற்றி அமைக்கவில்லை. இத்தனை தோல்விகளுக்கு பிறகு அவர்கள் தங்களின் திட்டங்கள் சரியானதுதானா என மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சில விஷயங்கள் எனது புரிதலுக்கு அப்பாற்பட்டு உள்ளது."
"இன்று அஸ்வின் பந்து வீசும் போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஓவர் தி ஸ்டம்பில் வீசினார். ஆனால், இதற்கு முன்பு அவர் அரவுண்ட் தி ஸ்டம்பில் தான் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார். அவர் ஓவர் தி ஸ்டம்பில் வீசியது சுனில் நரைனுக்கு மிக எளிதாக மாறிவிட்டது. இதெல்லாம் சிறிய விஷயங்கள். இத்தனை அனுபவம் வாய்ந்த வீரராக அஸ்வின் இருக்கிறார். அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பரான தோனி இருக்கிறார். அப்படி இருந்தும் எப்படி இது போன்ற விஷயம் நடக்கிறது? அவர்களது மூளை வேலை செய்வது நின்று போய் விட்டதா?" என மனோஜ் திவாரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 104 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரிலேயே எட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.