மும்பை: பிரித்வி ஷா குறித்து மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா நடந்து கொண்ட விதம் பற்றி அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரித்வி ஷா நீண்ட காலமாகவே இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என புகழப்பட்ட அவர் தற்போது மோசமான நிலையில் இருக்கிறார். பிரித்வி ஷாவின் உடற்தகுதி மோசம் அடைந்தது ஒருபுறம் இருக்க, அவர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதில்லை எனவும், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில் கவனம் செலுத்துகிறார் என்றும் சில குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே உள்ளன.

சமீபத்தில் அவர் 2024 சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் மும்பை மாநில அணியில் பங்கேற்றார். அந்த தொடரில் பிரித்வி ஷா மிகவும் மோசமாக விளையாடி இருந்தார். எனினும், மும்பை அணியில் இடம் பெற்று இருந்த அஜின்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடியதை அடுத்து மும்பை அணி கோப்பையை வென்று இருந்தது.
அடுத்து நடக்க உள்ள விஜய் ஹசாரே எனும் உள்ளூர் ஒருநாள் தொடரில் மும்பை அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அது குறித்து அவர் சமூக வலைதளங்களில் தனது பேட்டிங் சராசரி உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு, சிறப்பாக விளையாடிய தனக்கு அணியில் இடம் அளிக்கவில்லை என புலம்பி இருந்தார். அது பற்றி விளக்கம் அளித்துள்ள மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி சில உண்மைகளை போட்டு உடைத்தார்.
2024 சையது முஷ்டாக் அலி டிராபி தொடரின் போது பிரித்வி ஷா பலமுறை பயிற்சிக்கு வராமல் இருந்ததோடு, இரவு முழுவதும் பார்ட்டியில் பங்கேற்றுவிட்டு விடியற்காலை 6 மணிக்கு வருவார் என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அந்த அதிகாரி கூறியதாவது, "சையது முஷ்டாக் ட்ராபியில் நாங்கள் பத்து ஃபீல்டர்களுடன் விளையாடினோம். பிரித்வி ஷாவை ஃபீல்டிங்கின் போது ஆடுகளத்தில் ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். அவர் அருகே பந்து சென்றால் அதை எடுப்பது கூட அவருக்கு சிரமமாக இருந்தது."
"பேட்டிங் செய்த போது பந்தை பார்த்து அடிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. அவரது உடற்தகுதி, ஒழுக்கம், அணுகுமுறை எல்லாம் மிக மோசமாக இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிகளை அமல்படுத்த முடியாது. அணியில் இருந்த மூத்த வீரர்களும் அவரது அணுகுமுறை, நடந்து கொள்ளும் விதம் குறித்து புகார் சொல்லத் தொடங்கிவிட்டனர்."
"அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகளால் மும்பை மாநில கிரிக்கெட் அமைப்போ அல்லது மும்பை மாநில தேர்வு குழுவினர் எடுக்கும் முடிவுகளில் எந்த தாக்கமும் ஏற்படாது." என்றார் அந்த அதிகாரி. இதன் மூலம் பிரித்வி ஷாவை மும்பை மாநில கிரிக்கெட் அணி ஒதுக்கி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட பிரித்வி ஷா, தற்போது மாநில அணியாலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.