லக்னோ: தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போல் உத்தரப் பிரதேசத்தில் யுபி டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மீரட் மேவ்ரிக்ஸ் அணியை எதிர்த்து கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் மீரட் மேவ்ரிக்ஸ் அணி 7 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டன. தொடர்ந்து களமிறங்கிய மீரட் மேவ்ரிக்ஸ் அணியின் மாதவ் கெளசிக் அதிரடியில் பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 52 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 9 ஓவர்கள் முடிவில் மீரட் மேவ்ரிக்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து டிஎல்எஸ் முறைப்படி கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு 106 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. கான்பூர் அணியும் தொடக்கம் முதலே அதிரடியில் பொளந்து கட்டியது. இதனால் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களை குவித்திருந்தது. இதனால் மீரட் மேவ்ரிக்ஸ் அணியின் கேப்டன் ரிங்கு சிங் உடனடியாக பந்தை கையில் எடுத்து பவுலிங் செய்ய வந்தார்.
ரிங்கு சிங் வீசிய முதல் பந்திலேயே சவுரியா சிங் பவுண்டரி அடிக்க, 2வது பந்திலேயே அவரின் விக்கெட்டை வீழ்த்தி ரிங்கு சிங் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து அந்த ஓவரின் 5வது பந்தை கொஞ்சம் ஒய்டாக ரிங்கு சிங் வீச, இதனை எதிர்பார்க்காமல் பேட்டிங் செய்த ஆதார்ஷ் சிங் க்ரீஸில் இருந்து இறங்கி வந்து பேட்டை சுழற்றினார்.
ஆனால் பந்து ஏமாற்றி விக்கெட் கீப்பர் கைகளுக்கு செல்ல, அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் ரிங்கு சிங் வீசிய கடைசி பந்தில் சுதன்ஷு சொங்கர் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரிங்கு சிங் ஒரே ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து 7.3 ஓவர்களில் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக மீரட் மேவ்ரிக்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 19வது ஓவரை வீச ரிங்கு சிங்கை திடீரென சூர்யகுமார் யாதவ் அழைத்தார்.
அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த ரிங்கு சிங், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார். தற்போது பேட்டிங்குடன் சேர்த்து பவுலிங்கிலும் அவர் கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் பவுலிங் செய்ய முடியும் என்ற காரணத்திற்காக ஒருநாள் அணியில் ரியான் பராக்கிற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் ரிங்கு சிங் பவுலிங் செய்யாததால் ஒருநாள் அணி பக்கமே வர முடியவில்லை. இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட ரிங்கு சிங், யுபி டி20 லீக்கில் தொடர்ச்சியாக பவுலிங் செய்து சில நுட்பங்களை கற்றறிந்து வருகிறார். அவரின் பவுலிங்கிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலமாக ரிங்கு சிங்கால் எளிதாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும் என்று கருதப்படுகிறது.