சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வயதான ஆயுஷ் மாத்ரே என்ற இளம் வீரரை தங்களுடன் பயிற்சி செய்ய அழைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை அணியில் சேர்க்கவில்லை என்றாலும், அவரை பரிசோதனை முயற்சியாக தங்களுடன் பயிற்சி செய்ய அழைத்து இருப்பதாக சிஎஸ்கே அணி விளக்கம் அளித்துள்ளது.
அதை வைத்து சிஎஸ்கே அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களான ஆண்ட்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் "எங்களுக்கே வாய்ப்பு இல்லை, இவனுக்கு வாய்ப்பா?" என்று கேட்பது போல ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.

அடுத்து, நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார்.

இதை அடுத்து, "புலிப்பாண்டி பயங்கரமானவன்தான், ஆனா குழந்தைகளுக்கு கிடையாது" என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் அவர் விளையாட மாட்டார் என்பதை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்கள் அடிக்கும், ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களை எட்டும் என்றெல்லாம் பில்டப் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது 120 ரன்களுக்குள் சுருண்டது அந்த அணி. முதல் மூன்று பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் நான்கு ரன்களிலும், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை சுட்டிக்காட்டி, சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் வரும் நகைச்சுவையை வைத்து "எனக்கு சிரிப்பு வரல, கம்மின்ஸ்" என்று கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசினார். அதை வைத்து, "வலது கை பேட்ஸ்மேனுக்கு இடது கையில் பவுலிங் செய்வேன், இடது கை பேட்ஸ்மேனுக்கு வலது கையில் பவுலிங் செய்வேன்" என பவர் ஸ்டார் பில்டப் கொடுப்பது போல ஒரு மீம் வெளியிட்டுள்ளனர். ஆனால், போட்டியில் மட்டும் ஜெயிக்க மாட்டான் என இதற்கு ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கமெண்ட் எழுதி உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று இருக்கும் இஷான் கிஷன் முதல் போட்டியில் 106 ரன்கள் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் மொத்தமே நான்கு ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதை வைத்து, "முதல் மேட்சுக்கு பிறகு இந்த வண்டி ஓடாது" என வடிவேலு ஆட்டோ ஓட்டுவதை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.
இது போன்ற பல மீம்கள் ஐபிஎல் தொடர் தொடர்பாக பகிரப்பட்டு வருகின்றன. அடுத்து நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், "ரோஹித் சர்மா 30 ரன் குவித்தால் வீரன்" எனவும் சில கிண்டல் மீம்கள் வலம் வருகின்றன.