மும்பை ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அனைவரும் எதிர்பார்த்த போட்டி ஒன்று இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் தான். ஐபிஎல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனே, ஸ்டெயின் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அதில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக 300 ரன்கள் குவித்து சாதனை படைக்கும் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதற்கு ஏற்றார் போல் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பெரிய அளவு அதிரடி காட்டவில்லை.
காரணம் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்தது. அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதேபோன்று இசான் கிஷன் இரண்டு ரன்களில் வெளியேறினார். இதன் காரணமாக அனைத்து பொறுப்பும் டிராவிஸ் ஹெட் தலை மீது வந்து விழுந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்து வீச டிராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஒட்டுமொத்த மும்பை அணியினரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். மைதானத்தில் இருந்த அம்பானி குடும்பத்தினரும் உற்சாகமாக இருந்தனர். அப்போதுதான் மூன்றாம் நடுவர் இது நோபால் என அறிவித்தார். இதனை கொஞ்சம் கூட மும்பை அணி வீரர்களும் மும்பை அணியின் உரிமையாளர்களும் எதிர்பார்க்கவில்லை.
ஹெட் போன்ற வீரருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் மட்டுமில்லாமல் மும்பை வீரர்களும் கடுப்பாகினர். பும்ரா வெளிப்படையாகவே தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் பெரிய அளவு இன்றைய ஆட்டத்தில் சாதிக்கவில்லை. வெறும் 29 பந்துகளை எதிர் கொண்டு 28 ரன்களை மட்டுமே அவர் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 11.1 ஓவரில் 82 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.