மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று தற்போது ஆறாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது.
சிஎஸ்கே அணி எட்டு போட்டியில் விளையாடி இரண்டு வெற்றி ஆறு தோல்விகளை தழுவி தற்போது 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் தடுமாறியதால் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பெரிய இலக்கை துரத்த போகிறோம் என்று நினைத்தோம். ஆனால் சிஎஸ்கே அடித்தது மிகவும் குறைவான ஸ்கோர் தான் என்று தெரியும்.
ரோகித் சர்மாவும், சூரியகுமார் யாதவும் இன்று விளையாடும் விதத்தை பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக இருந்தது. ரோகித் சர்மா குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் இப்படி ஒரு இன்னிங்சை கண்டிப்பாக விளையாடுவார் என்று எங்களுக்கு தெரியும். ரோஹித் சர்மா அதிரடியை காட்டினால் எதிரணி நிச்சயம் தோற்றுவிடும் என்பதை நான் அறிவேன்.
ரோகித் சர்மாவுக்கு தகுந்த மாதிரி சூரிய குமார் யாதவ் அபாரமாக விளையாடினார். எங்கள் அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுகிறார்கள். நாங்கள் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். நாங்கள் ஏதும் மேஜிக் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.
சிம்பிளான கிரிக்கெட்டையே விளையாடுகின்றோம். சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இதை நான் உணர்ந்தவுடன் கடும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதற்கு தகுந்தார் போல் பந்துவீச்சை மாற்றினேன். நாங்கள் ஒரு நல்ல போட்டியை விளையாடுவது வெகு தூரத்தில் இல்லை. எனினும் இன்றைய ஆட்டத்திலும் சில தவறுகளை செய்தோம். அதனை நாங்கள் சரி செய்ய முயற்சி செய்வோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.