அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குவாலிஃபயர் 2 நாக் அவுட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இதன் மூலம் பைனலில் ஆர் சி பி அணியுடன், பஞ்சாப் மோதுகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஞ்சாப் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் மும்பை குவித்து முதன்முறையாக அதனை தற்காத்துக் கொள்ள முடியாமல் அந்த அணி தோற்று இருக்கிறது. ஸ்ரேயாஸ் தனியாக நின்று 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் நாங்கள் இன்று தோல்வியை தழுவி விட்டோம். தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி இருக்கிறார்.
நாங்கள் அடித்தது இந்த ஆடுகளத்திற்கு சரியான இலக்கு தான். ஆனால் எங்கள் பந்து வீச்சு படை திட்டங்களை சரியான முறையில் களத்தில் செயல்படுத்தவில்லை. பஞ்சாப் அணி கொஞ்சம் கூட பதற்றமே படாமல் அமைதியாக களத்தில் இருந்து எங்களை நெருக்கடியில் ஆளாக்கினார்கள். எங்கள் திட்டத்தை நாங்கள் நினைத்தது போல் சரியாக செயல்படுத்த முடியவில்லை.
பும்ரா எங்களை பல்வேறு போட்டிகளில் நெருக்கடியான கட்டத்தில் காப்பாற்றி இருக்கிறார். ஆனால் அவரால் கூட இன்று முடியவில்லை. ஒருவேளை பும்ராவை இன்னும் முன்பாக நான் பந்து வீச வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இறுதி போட்டிக்கு போக முடியாதது நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கின்றது. எங்கள் அணி வீரர்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். பஞ்சாப் அணிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.