மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் அபாரா ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 229 ரன்கள் என்ற இலக்கை எட்ட குஜராத் அணி முயற்சித்து இருந்தது.
அப்போது சூரியகுமார் யாதவுக்கு திடீரென்று காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் சூரியகுமார் மீண்டும் தனது பில்டிங்கை தொடர்ந்தார். இது குறித்து ஆட்டம் முடிந்தவுடன் ஜெயவர்த்தனே விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சூரியகுமார் தற்போது எப்படி இருக்கின்றார். அவர் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, எனக்கு தற்போது தெரிந்தவரை நிலைமை ஒன்றும் சீரியஸாக இல்லை.
மருத்துவர்களும் அது குறித்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதனால் அவர் நன்றாகத் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். சூரியக்குமார் யாதவால் ஒரு காலில் தான் விளையாட முடியும் என்ற நிலை வந்தால் கூட அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார். எங்களுக்கு இம்முறை கடினமான அட்டவணை போடப்பட்டிருக்கிறது.
ஆனால் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார்கள். ஆரோக்கியமாகவும் உள்ளனர். காலில் தசை பிடிப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் மருத்துவக் குழு என்னிடம் இதுவரை எந்த ஒரு விஷயத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு கால் நன்றாக இருந்தால் கூட இந்த வீரர்கள் எல்லாம் எங்கள் அணிக்காக விளையாடுவார்கள்.
எனவே ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறினார். குஜராத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் கூட சூரியகுமார் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அது மட்டுமில்லாமல் இந்த சீசனின் 15 இன்னிங்ஸ்களாக 25 ரன்களுக்கு மேல் சூரியகுமார் அடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். 15 போட்டிகளில் சூரிய குமார் 673 ரன்கள் அடித்து ஆரஞ்சு கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆரஞ்சு கோப்பையை வெல்ல சூரியகுமாருக்கு 87 ரன்கள் தேவைப்படுகிறது.